முற்காலத்தில், உப்பெடுக்கும் உப்பளங்கள் நிறைந்த `ஒஸ்டியா’ என்ற பகுதியில் இருந்து ரோமுக்கு உப்புக் கொண்டுவர ஒரு பெரிய சாலையையே ரோமானியர்கள் அமைத்திருந்தனர். அந்தச் சாலைக்கு `வயசாலரியா’ என்று பெயர். மேலும், முன்பு ரோமானியப் படை வீரர்களுக்கு ஊதியமாக உப்போ அல்லது அதை வாங்கத் தகுந்த அளவு பணமோதான் கொடுத்தனர். அந்தப் பணத்துக்கு `சாலரியம் அர்ஜெண்டம்’ என்று பெயர். அது மருவித்தான் `சாலரி’ (சம்பளம்) ஆயிற்று. நட்புக்கு உப்பை அடையாளமாகக் கொண்டிருந்தனர் அரேபியர்கள். உப்பே கிடைக்காத நாடுகளில் உப்பு வைத்திருப்பவர்கள் பணக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். இஸ்ரேலில் உப்பு வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உண்டு. நம் நாட்டிலும் நவக்கிரகங்களில் ஒன்றுக்கு உப்பு நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது. சீனர்களும், இந்தியர்களும், எகிப்தியர்களும் நீண்ட காலத்துக்கு முன்பே உப்பைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தனர். டிராய் நகரில் கி.மு. 13-ம் நூற்றாண்டில் மீன்களை உப்புப் போட்டுக் காயப்போடும் வழக்கம் இருந்திருக்கிறது.