அம்மாவின் கைபேசி சினிமா விமர்சனம்

ஒன்பது பிள்ளைகளைப் பெற்றத் தாய் தன் கடைசி மகன் மீது வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தை உருக உருக சொல்லிருக்கிறார் தங்கர்பச்சான். துப்பாக்கி, போடா போடி என்ற சரவெடிகளின் சத்தங்களுக்கு மத்தியில் காணாமல் போய்விட்டது அம்மாவின் கைபேசி. அதையும் மீறி படம் பார்க்க செல்பவர்களை நீண்ட காட்சிகளால் ரசிகர்களின் பொறுமையை இயக்குனர் சோதிப்பது கொடுமை.

வீட்டின் கடைசி மகன் என்பதால் அம்மாவுக்கு செல்லப்பிள்ளையாகவே வளர்கிறார் அண்ணாமலை என்கிற சாந்தனு. வேலைக்குப் போகாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றும் நபராக இருக்கிறார் சாந்தனு. அதனால் வீட்டின் மற்ற அண்ணன்களும் அக்காவும் சாந்தனுவை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தன் மாமன் மகளான செல்வி என்கிற இனியாவை காதலித்து வருகிறார் சாந்தனு. இனியாவை அடைய வேண்டும் என்பதற்காக, நல்லவனாக திருந்தி பொருப்புள்ள பிள்ளையாக இருந்து தன் மாமாவிடமே வேலைக்கு சேர்கிறார்.

இந்த நேரத்தில் வீட்டில் ஒரு விஷேஷம் நடக்கிறது. தங்க நகை காணாமல் போக, அதை சாந்தனுதான் எடுத்திருப்பார் என்று எல்லோரும் சந்தேகப்பட, சாந்தனுவை அடித்து உதைத்து வீட்டைவிட்டே துரத்திவிடுகிறார் அவர் அம்மா. பல இடங்களில் வேலைக்கு போய் கஷ்டப்படுகிறார். சில நல்ல முதலாளிகள் அவருக்கு கிடைப்பதால் நன்றாக சம்பாதித்து வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைகிறார்.  

அதுவரை வீட்டுக்கு போகாமலும் தன் அம்மாவை பார்க்காமலும் இருந்த சாந்தனு, தன் அம்மவுடன் பேச ஒரு கைபேசி வாங்கி அம்மாவுக்கு அனுப்புகிறார். அம்மாவும் மகனும் கைபேசியில் பாசத்தை பரிமாறிக்கொள்கிறார்கள். தான் வேலை செய்யும் இடத்தில் உண்மையாக இருப்பதால், எதிரிகளையும் சம்பாதித்து கொள்கிறார். அந்த எதிரிகள் சாந்தனுவை தீர்த்துக்கட்ட துடித்துக் கொண்டிருக்க, இறுதியாக அம்மாவும் மகனும் சந்தித்துக்கொள்கிறாரார்களா என்ற கேள்வியை நோக்கி நகர்கிறது க்ளைமாக்ஸ்.   

ஏற்கனவே சிக்கலான கதையை மேலும் ஒரு சிக்கலான திரைக்கதையில் சிக்கவைத்து, அவரும் சிக்கிகொண்டு பார்வையாளர்களையும் சிக்கவைத்து படம் முடிகிறவரை புலம்ப வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தங்கர்பசசான். தன் நீ....ண்ட காட்சிகளின் மூலம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

’அம்மாவின் கைபேசி’ அண்ணாமலையின் கதையாக இல்லாமல் பிரசாத்தின் கதையாக இருப்பது எதிர்பார்க்காத ஏமாற்றம். ( படத்தில் தங்கர்பச்சான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் பிரசாத் ).  இன்னும் சொல்லப்போனால் அவரே நடித்திருக்கும் அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு நீளமான காட்சிகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது. இதுல அவருக்கு தனியா ஒரு பாட்டு வேற! தங்கர் பச்சன் சார், நடிப்பதற்கு ஆள் கிடைக்கல என்று சாக்கு சொல்லி அடுத்தப் படத்திலும் நீங்களே 
நடிக்க வேண்டாம். நீங்கள் இப்படி பேசும்போதெல்லாம், கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்த பாண்டியனை ஹீரோவாக்கிய பாரதிராஜா தான் நினைவுக்கு வருகிறார். 

தங்கர்பச்சான் எழுதிய நாவல் என்பதால், அதை அவரே படமாக்கும் போது அந்தக் காட்சியின் அழுத்தம் குறையாமல் இருக்க விரிவான காட்சிகளை அமைத்திருக்கலாம் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. இருந்தாலும் அந்தக் காட்சிகளை ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டேபோவது எரிச்சலையே உண்டாக்குகிறது. 

படத்தில் ஒரே ஒரு அறுதலான விஷயம் தன் வேலையை மிகச்சரியான விதத்தில் செய்திருக்கிறார் சாந்தனு. நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அம்மாவின் பாசத்துக்கு அடங்கி நடக்கும்போதும் , இனியாவுக்கு நச்சுன்னு ஒரு இச்சு வைக்கும் போதும், எதிரிகளிடம் சிக்கிகொண்ட போதும், ரொம்ப தெளிவான நடிப்பு. 

இனியா, கொடுத்த காட்சிகளை சும்மா அல்வா மாதிரி சாப்பிட்டிருக்கிறார். குறைவான காட்சிகள் என்றாலும், நிறைவான நடிப்பு. அம்மாவாக நடித்திருக்கும் ரேவதி கிராமத்துத்தாயை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். அண்ணாமல... அண்ணாமல... என்று மகனிடம் பேசும் வசன உச்சரிப்பிலும் கூட பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கைபேசியில் பேசும்போதெல்லாம் டவர் கிடைக்காமல் சுவர் மேல் ஏறி நின்று பேசும் வேடிக்கையான காட்சிகள் ரசிக்கவைத்தன. காமெடி என்ற பெயரில் தங்கர்பச்சான் செய்த சேஷ்டைகள் மிகவும் கோபப்படுத்தின.  

அம்மாவின் பாசம் அளக்க முடியாதது, உலகத்தில் அம்மாவுக்கு நிகர் யாருமில்லை, கண்ணில் தெரியும் கடவுள் அம்மா என்ற கருத்துகளை உணர்த்தும் படைப்பாக இருக்கிறது அம்மாவின் கைபேசி. சாப்பாடு சமைத்துவிட்டால் மட்டும் போதுமா? சமையல் நன்றாக இருந்தால் தானே சாப்பிட முடியும். 

தங்கர்பச்சன் சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், அழகி மாதிரியான அழியாத ஒரு படைப்பை மீண்டும் எடுக்க முடிந்தால் எடுங்க, இல்லைன்னா ஆளவிடுங்க! 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget