தில்லு முல்லு சினிமா விமர்சனம்

நடிகர் : சிவா
நடிகை : இஷா தல்வார்
இயக்குனர் : பத்ரி
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு : லஷ்மண்

வேலைவெட்டி இல்லாமல் தன்னுடைய தங்கை மற்றும் மாமாவுடன் சென்னையில் வசித்துவரும் சிவாவின் அப்பா, தவறான ஒருவருக்கு சாட்சி
கையெழுத்துப் போடப்போய் தன்னுடைய வீட்டையே வங்கிக்கு தாரைவார்த்துக் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

இதனால் கடன்காரனான சிவா, கடனை அடைக்க ஒரு வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். அவருடைய மாமாவான இளவரசு, மிகவும் கண்டிப்புடன் இருக்கும் தன்னுடைய நண்பன் பிரகாஷ்ராஜின் மினரல் வாட்டர் கம்பெனியில் சிவாவை சேர்த்துவிட முடிவெடுக்கிறார்.

ஆனால், பிரகாஷ் ராஜுக்கோ வேலையில் சேருவதற்கு யாரும் சிபாரிசு செய்வது பிடிக்காது. மேலும் முருக பக்தரான அவருக்கு, அவருடைய பாணியிலேயே சென்று எப்படியாவது வேலையைப் பெற்றுவிடவேண்டும் என்று ஐடியா கூறுகிறார். அதன்படி, தனக்கு கொஞ்சமும் பழக்கமில்லாத பக்தி வேடமணிந்து இண்டர்வியூவுக்கு செல்கிறார் சிவா. தன்னுடைய பெயருக்கு விளக்கம் சொல்லும்விதமே பிரகாஷ் ராஜூக்கு சிவாவை பிடித்துவிட உடனே வேலைக்கு அமர்த்துகிறார்.

வேலையில் சேர்ந்தவுடன் ஒருநாள் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக சிவாவின் அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டதாக சிவாவின் நண்பர்கள் அலுவலகத்திற்கு போன் செய்ய, சிவாவோ இல்லாத அம்மாவை, இருப்பதாக பொய் சொல்லிவிட்டு நண்பர்களோடு சேர்ந்து மேட்ச் பார்க்க சென்றுவிடுகிறார்.

அப்போது, நண்பரின் விருப்பத்திற்காக மேட்ச் பார்க்க வரும் பிரகாஷ் ராஜ் மைதானத்தில் சிவா இருப்பதை பார்த்துவிடுகிறார். மறுநாள் அலுவலகத்தில் வந்து சிவாவிடம் கேட்க, சிவாவோ அது தான் இல்லை தன்னுடைய தம்பி கங்குலி கந்தன் என்று சொல்கிறார். நாங்கள் இருவரும் இரட்டையர்கள். தம்பி கராத்தே மாஸ்டர் என்றும் கூறுகிறான்.

மேலும், இதற்கு தன்னுடைய நண்பன் சத்யன் டபுள் ஹீரோவாக நடிக்கும் படமொன்றின் டெக்னிக்கை பயன்படுத்துகிறார். அதாவது சாதாரண கண்களோடு வந்தால் அண்ணன், பூனைக் கண்களோடு வந்தால் அது தம்பி என்று பிரகாஷ் ராஜிடம் சொல்கிறார். இதை உண்மை என்று நம்புகிறார் பிரகாஷ் ராஜ்.

இந்நிலையில் தன்னுடைய மகளான இஷா தல்வாருக்கு கராத்தே பயிற்சி அளிக்க தம்பியை தனது வீட்டுக்கு வரச்சொல்லுமாறு அண்ணன் சிவாவிடம் கூறுகிறார் பிரகாஷ்ராஜ். அவருடைய பேச்சுக்கு எதிர்பேச்சு பேசமுடியாத சிவா, தனது நண்பன் சத்யனிடமிருந்து கராத்தே ஆடையையும், பூனை கண்களுக்கான காண்டக்ட் லென்ஸும் வாங்கி போட்டுக் கொண்டு பிரகாஷ்ராஜ் வீட்டிற்கு சென்று பயிற்சி கொடுக்கிறார்.

இஷா தல்வாருக்கு பயிற்சி கொடுக்கும் தம்பி சிவாவை இஷா தல்வார் காதலிக்கிறார். மறுமுனையில், சிவா இரட்டையர்கள்தானா? என்ற சந்தேகம் பிரகாஷ்ராஜூக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இதை கண்டறிவதற்கு தனியாக ஒரு டிடெக்டிவை வைக்கிறார் பிரகாஷ் ராஜ். தன்னுடைய தில்லு முல்லுகளால் அதிலிருந்து எஸ்கேப் ஆகிறார் சிவா.

உடனே, தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ளும் பொருட்டு பிரகாஷ் ராஜிடம் சென்று அண்ணன்- தம்பி இருவருமே வேலையை விட்டுவிடுவதாக கூறுகிறார். ஆனால், சிவாவின்  தில்லு முல்லுகளை அறியாத பிரகாஷ் ராஜ், அவரை வேலையிலிருந்து வெளியே அனுப்ப மறுக்கிறார். தன்னுடைய தவறுக்கு சிவாவின் அம்மாவை சந்தித்து மன்னிப்பு கோரப் போவதாக பிரகாஷ் ராஜ் கூறியதும் சிவா சற்று தள்ளாடிப் போகிறார்.

உடனே, வீட்டுக்கு சென்று வீட்டு வேலை செய்யும் கோவை சரளாவை சீக்கிரம் சீக்கிரமாக அம்மா வேடம் போட்டு அமரவைக்கிறார். சிவா வீட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ் கோவை சரளாவின் பக்திமயமான வேஷத்தை கண்டு மெய்சிலிர்த்துப் போகிறார். இதன்மூலம் சிவா மீது பிரகாஷ்ராஜ் வைத்திருந்த மதிப்பு மேலும் இருமடங்காகிறது. இந்நிலையில் தம்பி சிவா- இஷா தல்வாரின் காதல் பிரகாஷ் ராஜூக்கு தெரியவருகிறது. அவர்களை பிரிக்க நினைக்கிறார். அதே நேரத்தில் அண்ணன் சிவாவிற்கு தன்னுடைய மகளை கட்டிக் கொடுக்க முடிவெடுக்கிறார்.

இறுதியில் சிவா தன்னுடைய தில்லுமுல்லுகளை பிரகாஷ் ராஜிடம் எடுத்துக்கூறினாரா? இஷா தல்வாரை கரம்பிடித்தாரா என்பதே மீதிக்கதை. 

ஏற்கெனவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தின் ரீமேக்தான் இந்தப்படம். அப்போது இப்படத்தை எடுத்தபோது, ஆக்சன் ஹீரோவாக இருந்துவந்த ரஜினி, காமெடி வேடத்திற்கு பொருந்துவாரா? என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்களையெல்லாம் கே.பாலச்சந்தர் தவிடுபொடியாக்கினார். தற்போது, இப்படத்தில் ரஜினியின் நடிப்புக்கு சிவா ஈடுகொடுப்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது. அதையும் தவிடுபொடியாக்கிறது இந்த சிறிய டீம்.

ஒரே உருவத்தில் அண்ணன்- தம்பி என இரண்டு வேடங்களில் நடித்துள்ள சிவாவின் பலமே அவருடைய அசாதாரணமான முகபாவனைகள்தான். தன்னுடைய முதலாளி ‘பேஸ்புக்ல இருக்கீங்களா?’ என்று கேட்டதும், பதிலுக்கு இவர் ‘இல்ல திருவான்மியூர்ல இருக்கிறேன்’ என்று சொல்வதாகட்டும், ‘காந்திக்கு அப்புறம் டிரெஸ்-க்காக கலாய் வாங்குவது நானாகத்தான் இருக்கும்’ என்று சொல்வதாகட்டும், சிவா சொல்லும்போது மட்டுமே சிரிப்பு வருகிறது. படம் முழுவதும் பயங்கர கைதட்டல் பெறுவது இவர் பேசும் வசனங்கள்தான். சிவாவுக்கு ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் கொடுத்ததில் தவறு ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.

தீவிரமான முருக பக்தராக வருகிறார் பிரகாஷ் ராஜ். சிவா செய்யும் தில்லு முல்லுகளை அறியாத அப்பாவியான முகம். குங்பு சண்டையில் ரவுடிகளை வெளுத்து வாங்கிவிட்டு, ‘பெத்தவங்க பேச்சை இப்ப உள்ள பிள்ளைங்க எங்க கேட்கிறாங்க’ என்று அசால்ட்டாக பேசி, பெரிய கைதட்டல்களை பெற்றுவிடுகிறார்.

வாயைத் திறந்தாலே சென்னை பாஷையில் வெளுத்துக்கட்டும் கோவை சரளாவுக்கு, அம்மா என்ற பதவியை கொடுத்து, வாயில் வேல் குத்தி ஊமையாக்கிவிட்டார்கள். இருந்தாலும், மைன்ட் வாய்ஸ்-ல் இவர் பேசும் வசனம் கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாயகி இஷா தல்வார் அழகு பதுமையாய் வந்து போயிருக்கிறார். அரை குறை ஆடையில் படம் முழுக்க கவர்ச்சியை வாரி வழங்கியிருக்கிறார். நாயகனைப் பற்றி ரவுடிகளிடம் இவர் பேசும் வீர வசனங்களில் வீரம் இல்லை.

சிவாவின் மாமாவாக வரும் இளவரசு, பிரகாஷ் ராஜிடம் மானேஜராக பணிபுரியும் மனோபாலா, நடிகராக வரும் சத்யன், ஆகியோரும் படத்தின் ஓட்டத்துக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

சிவாவின் தங்கையாக வரும் மோனிஷா பார்க்க அழகாக இருக்கிறார். இவருக்கு நடிப்பதற்குண்டான வாய்ப்பு குறைவே என்றாலும் தன்னுடைய பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

இதுவரையிலான படங்களில் வேஷ்டி, லுங்கி என சுற்றிக்கொண்டிருந்த சூரிக்கு இந்த படத்தில் பளபளக்கும் கண்ணாடி, ப்ளீச் போட்ட முடி, ஜீன்ஸ், டீஷர்ட் என மாடர்ன் இளைஞனாக அலைய விட்டிருக்கிறார்கள். இவரும், சிவாவின் தங்கையும் காதலிப்பதும், காதல் கூடுவதற்காக அவ்வப்போது நட்பு பற்றி சிவாவிடம் இவர் பேசும் வசனங்களும், சிவா அதற்கு கவுண்டர் வசனம் கொடுப்பதும் தியேட்டரில் விசில் பறக்கிறது.

படத்தின் கிளைமாக்சில் மாப்பிள்ளை கோலத்தில் என்ட்ரி ஆகிறார் சந்தானம். வழக்கம்போல் தன்னுடைய பஞ்ச் வசனங்களால் கடைசி 5 நிமிடங்களை மேலும் கலகலப்பூட்டியிருக்கிறார்.

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடியில் களைகட்டுகிறது. தன்னுடைய வசனங்களால் படம் முழுவதும் ரசிகர்களை சிரிக்க வைப்பதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் பத்ரி. மிகப்பெரிய இயக்குனர்களின் படங்களை ரீமேக் செய்யும்போது, அந்த படத்தின் இயல்புக்கும், இயக்குனரின் புகழுக்கும் சிறிதும் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் ரொம்பவும் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர். இவருடைய வசனங்கள்தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. 

முதன்முதலாக எம்.எஸ்.விஸ்வநாதனும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். ‘தில்லு முல்லு’ பாடலுக்கு இருவரும் இணைந்து திரையில் தோன்றி நடனமும் ஆடியிருக்கிறார்கள். இவர்களுடைய இசையில் ’ராகங்கள் பதினாறு உருவான வரலாறு’ பாடல் கார்த்திக் குரலில் இனிமையாக ஒலிக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

லட்சுமணன் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் கண்களுக்கு இதமாய் காட்சியளிக்கின்றன. ப்ரவின், ஸ்ரீகாந்த் இருவருடைய எடிட்டிங் காட்சிகளின் கோர்வைக்கு உறுதுணையாய் இருக்கின்றன.

மொத்தத்தில் ‘தில்லு முல்லு’ சிரிப்பு வெடி....
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget