வாடகைக்கு வீடு பார்க்க செல்லும் முன் யோசிக்க வேண்டியவை

வீடு பார்க்கப் போகும்போது, பகல் நேரத்திலேயே செல்லுங்கள். பஸ் ஸ்டாப்பிலிருந்து, அந்த வீட்டுக்கு நடந்து சென்று பாருங்கள். ஏனெனில்,
நடந்து சென்றால் தான் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரியும். கணவர், கார், வண்டி வைத்திருக்கலாம். ஆனால், மனைவியோ, குழந்தைகளோ, அடிக்கடி வெளியே செல்ல பஸ் தான் தேவைப்படும்!

முடிந்தவரை, உங்கள் பிள்ளைகள்
படிக்கிற பள்ளி அருகிலேயே, வீடு இருக்கும்படி பாருங்கள். வீட்டைச் சுற்றி இடமிருந்தால், அதன் வழியே நடந்து சுற்றி பாருங்கள். அப்போது தான், எங்கிருந்தெல்லாம் உங்கள் வீட்டை பிறர் கவனிக்க முடியும் என்பது புரியும்.

நீங்கள் குடிபோகும் வீட்டில், ஏற்கனவே குடியிருப்பவர்கள் காலி செய்யாமல் இருந்தால், நீங்கள் சென்று வீடு பார்க்காதீர்கள். 

யாருமே இல்லாமல் வெறும் வீட்டை மட்டும் பார்க்கும் போது தான், வீடு எவ்வளவு பெரியது, நாம் வைத்துள்ள பொருட்களுக்கு, அந்த வீடு போதுமா என்பது தெரிய வரும். தண்ணீர் வசதி, மின் வசதிக்கு தனி மீட்டர் தானா என்று, நீங்களே சோதித்து பாருங்கள். 

பாத்ரூமில் தண்ணீர் அடைத்து போகாமல் இருப்பது, சில கதவுகள், ஜன்னல்களை, "லாக்’ பண்ண முடியாமல் இருப்பது என்று, எதுவாக இருந்தாலும், வீட்டு உரிமையாளரிடம் சொல்லி சரி செய்ய சொல்லுங்கள். அந்த வசதியை அவர் செய்து கொடுத்த பிறகே குடி வாருங்கள். குடி வந்தபின், அவர் செய்து தர மாட்டார்.

சில இடங்களில், கீழ் வீட்டை வாடகைக்கு விட்டு, மாடி வீட்டில் உரிமையாளர் இருப்பார். அவர், நாய் வளர்த்தால், எங்கு கட்டி வைப்பார் என்று பாருங்கள். கேட் அருகே அல்லது உங்கள் வீட்டருகே கட்டி வைத்தால், அது குரைத்துக் கொண்டே இருப்பது, உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். மேலும், அந்த இடத்தையும் நீங்கள் தான் சுத்தம் செய்ய வேண்டி வரும்.

குடிபோகும்போதே, வீட்டில் எத்தனை டியூப் லைட், பேன் மற்றும் கண்ணாடி, ஜன்னல் உடைந்திருக்கிறது என, ஒரு நோட்டில் குறிப்பிட்டு, உங்கள் கையெழுத்து மற்றும் வீட்டு உரிமையாளர் கையெழுத்தையும் வாங்கி பத்திரப்படுத்துங்கள். இல்லாவிட்டால், நீங்கள் காலி பண்ணும் போது, ஏற்கனவே உடைந்திருந்த கண்ணாடி ஜன்னலுக்கும் நீங்கள் தான் தண்டம் அழ வேண்டி வரும்.

நீங்கள் குடிபோகும் வீட்டின் காம்பவுண்டில், எத்தனை வீடுகள் உள்ளன என, கவனியுங்கள். அவர்களுக்கு பாதை எது என்பதையும் கவனியுங்கள். ஏனெனில், அவர்கள் செல்லும் பாதை, உங்களுக்கோ, நீங்கள் புழங்கும் இடத்திற்கோ, இடைஞ்சல் இல்லாமல் இருக்கிறதா என கவனியுங்கள்.

நீங்கள் வாகனம் ஏதாவது வைத்திருந்தால், வண்டியை நிறுத்த இடம் உள்ளதா என்பதை கவனியுங்கள். வீட்டு வாடகையை எத்தனை வருடத்துக்கு ஒரு முறை உயர்த்துவர் என்பதை, தெளிவாக பேசிக் கொள்ளுங்கள். 

வீட்டு உரிமையாளர்கள், ஆயிரம் கண்டிஷன்கள் போட்டு, டென்ஷன் ஏற்படுத்திவிடுவர். நாமும் கொஞ்சம் முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே!
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget