சகுனி திரை விமர்சனம்


ட்ரீம் வாரியர்ஸ் & ஞானசேகரன் தயாரிப்பில் கார்த்தி-சந்தானம் காம்பினேசனில் இன்று வெளியாகியிருக்கும் படம் சகுனி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரும் அரசியல் படம் என்பதாலும் கமல்-ரஜினி-ஸ்ரீதேவி காம்பினேசன் என ட்ரெய்லரே கலக்கியதாலும் கார்த்தி மாஸ் ஹீரோவாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் வெளியாகும் படம் என்பதாலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் இது.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால்...


காரைக்குடி கார்த்தியின் ஒரே சொத்தான செட்டிநாட்டு பெரிய பங்களாவை ரயில்வே புராஜக்ட்டுக்காக அரசு எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவிப்பு வருகிறது. தன் பங்களாவைக் காப்பாற்றிக்கொள்ள, ரயிவே அமைச்சர்-முதல்வர் என அரசியல்வாதிகளைப் பார்த்து முறையிட சென்னை வருகிறார் முதல்வர். அப்பாவி பொதுஜனமாக முறையிட்டால், எந்த மரியாதையும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு, கார்த்தி எடுக்கும் அவதாரமே ‘சகுனி’.


கார்த்தியின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஸ்டோரி செலக்சன் தான். எப்போதும் காமெடி கலந்த கதாபாத்திரத்தையே தேர்வு செய்வது மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். இதிலும் சமீபகாலமாக யாருமே தொடாத அரசியல் கதையை தேர்வு செய்திருக்கிறார். முதல் பாதி முழுக்க ஜாலியான இளைஞனாக, சந்தானத்தை கடுப்பேற்றுபவராக, ப்ரணீதாவை காதலிப்பவராக, அரசியல்வாதிகளின் ஆலோசகராக கலக்குகிறார் கார்த்தி.


சந்தானம் வழக்கம்போல் ஒன் லைனரில் கலக்குகிறார். ரஜினி (அப்பாத்துரை)_ஆக சந்தானமும் ’கமல’(க்கண்ணன்)-ஆக கார்த்தியும் அறிமுகமாகி பேசிக்கொள்ளும் காட்சிகள் செம ரகளை.


ட்ரெய்லரின் ரஜினி-கமல்-ஸ்ரீதேவி என பெரிய பில்டப் கொடுத்துவிட்டதால், அதை வைத்து இன்னும் நல்ல காமெடியைக் கொடுத்திருக்கலாம். அதில் ஏமாற்றமே! ஆனாலும் சந்தானம் வரும் காட்சிகளில் கலகலப்புகுப் பஞ்சமில்லை.


ப்ரணீதா.... பெரிதாக நடிக்க சான்ஸ் இல்லாவிட்டாலும் டூயட்களில் கல்ர்ஃபுல்லாக ஆடுகிறார், ஹீரோவைக் காதலிக்கிறார். இடைவேளைக்கு அப்புறம் காணாமல் போகிறார். படம் முடியும்போது கட்டிப் பிடிக்கிறார்(ஆடியன்ஸை இல்லீங்க..ஹீரோவைத் தான்!). தமிழில் இருக்கும் ஹீரோயின்கள் எல்லாம் (ஹி..ஹி..ஹன்சி தவிர) பழசாகி விட்ட நிலையில் ப்ரணீதாவுக்கு வளமான எதிர்காலம் உண்டு. அழகான கண்களுடன் ப்ரணீதா பளபளப்பாக வலம்வருகிறார். ஆளும் ‘வளமாகவே’ இருக்கிறார் என்பது மேலும் சிறப்பு!


வில்லன் முதல்வராக பிரகாஷ்ராஜ். நீண்ட நாளைக்கு அப்புறம் படம் முழுக்க வரும் கதாபாத்திரம். வழக்கம்போல் கேஷுவலாக கலக்கிச் செல்கிறார் மனிதர். கவுன்சிலர்-மேயராக ராதிகா, சாமியாராக நாசர், எதிர்க்கட்சித் தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் என பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். படத்தின் பலமாக வசனங்களைச் சொல்லலாம். முடிந்தவரை திரைக்கதையை காமெடியாக அமைத்ததும் படத்தை ரசிக்க வைக்கிறது.


கந்துவட்டி ராதிகாவை மேயராக ஆக்கும் கார்த்தியின் சகுனி வேலைகள் அட்டகாசம். ஆனால் அதே போன்றே கோட்டா ஸ்ரீனிவாசராவை கார்த்தி முதல்வர் ஆக்குவது ஒரு ரிப்பீட்னெஸைத் தருகிறது. பார்த்த காட்சிகளையே வேறு வடிவில் பார்க்கிறோம் என்ற சலிப்பு வரவே செய்கிறது. அதனாலேயே கடைசிக் காட்சிகளில் திரைக்கதையில் ஒரு தொய்வு விழுந்து விடுகிறது.


முதல்பாதியில் அனுஷ்கா வரும் காட்சிகள் எவ்வித காமெடியைவும் உண்டாக்கவில்லை. அதைவிட ப்ரணீதா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை அதிகமாக்கியிருக்கலாம். ’சந்தானத்திடம் கதை சொல்லும்’ திரைக்கதை உத்தி அருமை. அது இல்லையென்றால் முதல்பாதி மொக்கையாகவே ஆகியிருக்கும்.


வீடு மேல் கார்த்தி கொண்டிருக்கும் செண்டிமெண்ட்டைப் பற்றி விரிவான காட்சிகள் இல்லை. அரசியல் ஆலோசகராக ஆகும் கார்த்திக்கு அதற்குரிய பின்புலம் ஏதாவது இருப்பதுபோல் காட்டியிருக்கலாம். அதனாலேயே படத்தை முழுக்க ரசிக்க முடியவில்லை.


ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அருமை. முத்தையாவின் ஒளிப்பதிவும் ஸ்ரீஇதர் பிரசாத்தின் எடிட்டிங்கும் படத்துக்கு பக்க பலம். அனல் அரசுவின் சண்டைக்காட்சிகளில் அதிகம் எதிர்பார்த்தேன். தேவையில்லாத சண்டைக்காட்சிகள் என்பதால் படத்தோடும் ஒட்டவில்லை.


இருப்பினும் வித்தியாசமான கதைக்களனுடன், அரசியல் கதையை காமெடி கலந்து சொல்லியிருப்பதால் ஒரு முறை பார்க்கலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget