பனித்துளி திரை விமர்சனம்


மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மீரா, பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் நாயகன் சிவா இருவரும் காதலித்து வருகிறார்கள். தன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால் சிவா ஒரு நல்ல நிலைமையில் இருந்து தன் அப்பாவிடம் பெண் கேட்க வேண்டும் என யோசனை செய்கிறாள். இந்நிலையில் சிவாவிற்கு அமெரிக்காவில் ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்கான நேர்முகத் தேர்வினை மீரா ஏற்பாடு செய்கிறாள். மீராவிற்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. அதை வாங்கி வர சிவா செல்கிறான்.
அப்பொழுது ஒரு ரவுடி கும்பல் வாலிபர் ஒருவரை உயிரோடு எரித்துக் கொல்வதை காண்கிறான். அந்த ரவுடி கும்பலிடமிருந்து வாலிபரை காப்பாற்றும் முயற்சியில் சிவா முயற்சிக்கிறான். ஆனால் அதில் பலன் இல்லை. இந்த ரவுடி கும்பலுக்கு தலைவனாக ஒரு பெரிய மனிதர் தலைமை வகிப்பதையும் காண்கிறான். 

இதையடுத்து சிவாவிற்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கிறது. இதை அறியும் மீரா, சிவா தன் தந்தையை சந்திக்க ஏற்பாடு செய்கிறாள். அவளது அப்பாவை சந்திக்கும் சிவா, அவர்தான் ஒரு இளைஞனை உயிரோடு எரித்துக் கொன்ற ரவுடி கும்பலின் தலைவன் ராஜாராம் என்பதை அறிகிறான். 

மீராவை  திருமணம் செய்துகொள்ள சிவாவிடம் சில நிபந்தனைகளை விதிக்கிறார் ராஜாராம். அதன்படி ஓராண்டு காலம் மீராவிடம் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. அதன்பிறகு, என்னிடம் வந்து கேள். என் பெண்ணை மணமுடித்து வைக்கிறேன் என்று சொல்கிறார். 

அதற்கு சிவாவும் நான் ஒருவருடம் கழித்து திரும்பி வந்து உங்கள் பெண்ணை மணமுடிக்க கேட்கும்போது ஒப்புக்கொள்ளாவிட்டால் நீங்கள் ஒரு வாலிபரை கொன்றதை போலீசுக்கு சொல்லிவிடுவேன் என்று எச்சரித்துவிட்டு செல்கிறான். 

இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம், சிவாவை தீர்த்துக்கட்ட நினைக்கிறார். இந்நிலையில், அமெரிக்கா செல்லும் சிவா, ஒரு விபத்தில் சிக்கி 5 வருட முந்தையை நினைவுகளை இழந்துவிடுகிறான். இதனை அறிந்த ரவுடி கும்பல் அவனை துரத்துவதை நிறுத்திக் கொள்கிறது.

அமெரிக்காவில் தன் அலுவலகத்தில் பணிபுரியும் மாயாவோடு நெருக்கமாக பழகி வருகிறான் சிவா. ஒருநாள் இருவரும் தன் நண்பர்களோடு காட்டுக்குள் செல்கின்றனர். அந்த காட்டில் வசிப்பவர்கள் மாயாவிற்கு ஒரு மூலிகை மருந்தை கொடுக்கிறார்கள். அதை சிவா வாங்கி அருந்தி விடுகிறான். 

இதையடுத்து, மீராவின் நினைவுகள் சிவா மனதுக்குள் ஓடுகின்றன. இருவரும் திருமணம் செய்து கொண்டது போலவும், திருமணத்தின் போது சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவைக் காண்பதுமாக அவனது நினைவலைகள் அவன் கண்முன்னே வருகிறது. 

விழித்துப் பார்க்கும் சிவா, அவை கனவு என அறிந்து, அதுகுறித்து அறிவதற்காக மனநல மருத்துவரை சந்திக்கிறான். அவர்மூலமாக, அவனது வாழ்க்கையில் கடந்த 5 வருட நிகழ்வுகளும் அவனுக்கு தெரிய வருகிறது. இதை அறிந்துகொண்ட சிவா, மீராவை சந்திக்க நினைக்கிறான். இந்நிலையில் அவனுக்கு பழைய நினைவுகள் திரும்பிவிட்டதை அறிந்து கொண்ட ராஜாராமின் ரவுடி கும்பலும் சிவாவை தீர்த்துக்கட்ட எண்ணுகிறது. 

இறுதியில், சிவா மீராவை சந்தித்து, தன் காதலை சொல்லி கரம்பிடித்தானா? அல்லது ரவுடி கும்பலிடம் மாட்டிக் கொண்டானா? என்பதே மீதிக்கதை. 

சிவாவாக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக அறிமுகமாகும் முதல் படம். தன் நடிப்பு திறனை மிகவும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். சாப்ட்வேர் என்ஜீனியர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு அழகான நாயகன் கிடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மனநிலை பாதிக்கப்பட்டவர், காதல் காட்சி, சண்டைக் காட்சி அனைத்திலும் தன் நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியுள்ளார். 

மீராவாக நடித்திருக்கும் கல்பனா நாகரீக நங்கை வேடத்தில் அசத்துகிறார். மாயாவாக வரும் ஷோபனாவின் கவர்ச்சியும் அழகும் துள்ளல். 

அக்னல் ரோமன், பைசன், உசைன் ஆகியோரின் பின்னணி இசை திரைக்கதைக்கு தகுந்தார்போல் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. பாடல்கள் அனைத்தும் கேட்கும் படியாக உள்ளது. 

ராஜ்குமாரின் ஒளிப்பதிவில் அமெரிக்காவில் உள்ள அனைத்து பகுதிகளும் நம் கண்களுக்கு குளிர்ச்சியாக அமைந்துள்ளது. கதை, திரைக்கதை, வசன எழுதியதுடன் இயக்கவும் செய்திருக்கிறார் நட்டிகுமார். படத்தில் மீராவின் தந்தைக்கு அடியாளாகவும் வலம் வந்துள்ளார். நாயகனை கொல்ல அவர் தொடர்ந்து வரும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். 

கதையில் இடைவேளைக்குப் பிறகு காட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதனால் படத்தின் வேகம் பாதித்துள்ளது. 

மொத்தத்தில் ‘பனித்துளி’ இதமான குளுமை
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget