கமாண்டோ ஏகே 47 சினிமா விமர்சனம்

பழைய படத்தை ரீமேக் செய்து வெற்றிவெறுவது ஹாலிவுட்காரர்களின் வழக்கம். எப்போதோ எடுத்த படத்தை மறு உருவாக்கம் செய்கிற போது காலத்துக்கேற்ப நவீன தொழில்நுட்ப ஜாலங்களைப் புகுத்தி ரசிக்க வைப்பதுடன் வியாபார வெற்றியும் பெற்று விடுகிறார்கள். 1984ல் வெளிவந்த படம் "ரெட் டான்'. இந்தப் படத்தை இதே பெயரில் மீண்டும் உருவாக்கி வெளியிட்டதில் வசூலிலும் சோடை போகவில்லை.
"ரெட் டான்' படம் தமிழில் "கமாண்டோ ஏகே 47' என்ற பெயரில் வெளிவருகிறது.
போர் சம்பந்தப்பட்ட இந்த ஆக்ஷன் படத்தை மெட்ரோ கோல்டுவின் மேயர் நிறுவனம் தயாரித்துள்ளது. பல போராட்டங்கள், தடங்கல்களுக்குப் பிறகுதான் படம் உருவானது. 2008-ல் படத்தின் தயாரிப்பு அறிவிப்பு வந்தது. 2009ல் தொடங்கப்பட்டது. 2010 நவம்பரில் வெளியிடத் திட்டமிடப்பட்டது.
ஆனால் பொருளாதாரப் பிரச்சனை ஒருபக்கம் தாமதப்படுத்தியது. கதையில் வரும் எதிரிகள் வில்லன்கள் சீனாவிலிருந்து வருவதாக ஆரம்பத்தில் கதை உருவாகி காட்சிகளும் எடுக்கப்பட்டன. வில்லன்கள் சீனர்கள் என்று இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ள செய்தி சீனாவின் குளோபல் டைம் பத்திரிகையில் வெளியாகி சர்ச்சை உருவாகவே சீனர்கள் என்பதை வட கொரியர்கள் என்று மாற்றி கதை அமைக்கப்பட்டது.
இதனால் பல லட்சம் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. இருந்தாலும் சீனாவுக்கென்று ஒரு ஹாலிவுட் பட வியாபாரம் இருக்கிறது. எனவே சீனாவையோ சீனர்களையோ பகைத்துக் கொள்ள முடியாது என்ற வகையில்தான் இந்த மாற்றம்.
நாளைய பொழுது எப்படி விடியுமோ என்பது நம் நாட்டு மக்களின் கவலை. அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் ஒரு நகத்தில் அதிகாலை நேரத்தில் செவ்வானம் கலையும் முன்பு அன்றைய பொழுது எப்படி இருக்கப் போகிறதோ என்று மக்கள் கவலையுடன் விடியப்போகும் காலைக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று நடக்கிறது. வான் வழியே தாக்குதல் நிகழ்கிறது.
இதை எப்படி எதிர்கொள்வது என்று மக்கள் அதிர்கிறார்கள். நகரத்தை குறிவைத்து அது நாட்டுக்கே ஆபத்தாகி விடும் அபாயம் குறித்து சில இளைஞர்கள் மட்டும் பொறுப்புணர்வு கொள்கிறார்கள். அவர்கள் க்ரிஸ் ஹெம்ஸ் வொர்த்,ஜோஷ் பெக், ஏட்ரினா பாலிக்கி, கானர் க்ருஸ், எட்வின் ஹாட்ஜ். மகிழ்ச்சியாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் பதின் பருவத்தினர் இவர்கள். இவர்கள் சொந்த ஊருக்கு அப்போதுதான் விடுமுறைக்கு வந்திருக்கிறார்கள்.
அங்கு தங்கியிருக்கும் போது அவர்கள் கண்ட அனுபவம், அவர்களைப் போராளிகளாக்குகிறது. தங்கள் நகரத்தைக் குறிவைத்து தாக்கி பேரழிவு ஏற்படுத்த முனையும் வடகொரிய போர்வீரர்களின் செயலை முறியடிக்க திட்டம் போடுகிறார்கள். இந்த ஐவர் அணி கொரில்லா முறையில் பதிலடி கொடுக்க தீர்மானிக்கிறது. தங்கள் குழுவிற்கு வால் வரின்ஸ் என்று பெயர் வைத்து கொண்டு அவர்கள் எப்படி அந்நிய சக்தியை முறியடித்து சொந்த நகரத்தைக் காப்பாற்றுக்கிறார்கள் என்பதே "கமாண்டோ ஏகே 47' கதை.
இது போர் சம்பந்தபட்ட ஆக்ஷன் கதை என்றாலும் சென்டிமெண்ட் காட்சிகளும் உண்டு. வால்வரின் என்பது கரடி மாதிரி ஒரு விலங்கு, அதன் நகங்கள் விஷேசமானவை. வேட்டையாடும்போது பயங்கரமாக இருக்கும். இந்தப் பெயரை வைத்துக் கொண்டு படத்தில் வாலிப வீரர்கள் செய்யும் சாகசங்கள் சிலிர்க்க வைக்கும்.
இப்படத்தின் கதை பற்றி ஆரம்பத்தில் நல்லபடியாக விமர்சனங்கள் வரவில்லை. நம்ப முடியாத கதை. காதில் பூ சுற்றுகிறார்கள். சின்னப் பசங்களை வைத்துக் கொண்டு கதை விடுகிறார்கள் என்றெல்லாம் எழுதினார்கள். ஆனால் பரபரப்பு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்பதை மட்டும் எல்லாரும் ஒப்புக் கொள்ளத் தவறவில்லை. ரசிகர்கள் தீர்ப்பு விமர்சனங்களுக்கு எதிராக இருந்தது. படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்தார்கள். வசூலில் மிரட்டிக் கொண்டிருக்கிறது.
படத்தை இயக்கியிருப்பவர் டேன் பிராட்லி. இவர் "ஸ்பைடர் மேன்', "இண்டிபெண்டன்ஸ் டே' போன்ற படங்களில் சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளாராகவும் இரண்டாவது யூனிட் இயக்குநராகவும் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget