குரு பெயர்ச்சி பலன்கள் 2013 - 2014

விஜய வருடம், வைகாசி மாதம் 14-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை (28.5.13) கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, மேல்நோக்கு உள்ள உத்திராட நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம் ஜீவனம் நிறைந்த சித்த யோகத்தில், ஏழாம் ஜாமத்தில், பஞ்ச பட்சியில்- கோழி துயில் கொள்ளும் நேரத்தில், உத்தராயன புண்ணிய கால வசந்த ருதுவில், இரவு 9.15 மணிக்கு பிரகஸ்பதி எனும் குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து
மிதுன ராசிக்குள் சென்று அமர்கிறார். 12.6.14 வரை இங்கு அமர்ந்து தனது கதிர் வீச்சை செலுத்துவார்.

எந்த ஒரு கிரகமும் நீசம் அடையாத, அனைத்து கிரகங்களும் நட்பு பெறும் நடுநிலை வீடான புதன் கிரகத்தின் மிதுனத்தில் குருபகவான் அமர்வதால், அனைத்து ராசியினருக்கும் மத்திம பலன்களே கிடைக்கும். அதாவது, நற்பலன்கள் பெறப்போகும் ராசிக்காரர்களுக்கும் அளவாகவே நல்லது நடக்கும். அதேபோல், கெடு பலன்கள் ஏற்படப் போகும் ராசிக்காரர்களுக்கும் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும்.

சமாதான வீட்டில் குரு அமர்ந்தாலும் உலகெங்கும்... ஆட்சியாளர்கள், தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு-
செயல்பாடுகளால் சண்டை-சச்சரவுகள் அதிகரிக்கும். வடக்கு மூலைக்கு அதிபதியான புதனின் வீட்டில் தென்னக கிரகமான குரு அமர்வதால், பூமியில் வடக்குப் பகுதியில் இருப்பவர்களும், தெற்குப் பகுதியில் வாழ்பவர்களும் மோதிக்கொள்வார்கள். புதிதாக வானொலி, தொலைக்காட்சி சேனல்களும், நாள், வார, மாதப் பத்திரிகைகளும் வெளியாகும். 28.5.13 முதல் 12.6.14 வரையிலும் ஊடகங்களின் காலம் என்றே சொல்லலாம். வி.ஐ.பி-களின் கடந்தகால அந்தரங்க விஷயங்களும், நிகழ்கால நிழல் சம்பவங்களும் வெளியாகி பரபரப்புகள் பற்றிக்கொள்ளும். வித்யாகாரகன் புதனின் வீட்டில் குரு அமர்வதால், தேர்வு முறையில் பல மாற்றங்கள் வரும். மாணவர்களை சுயமாக சிந்திக்கத் தூண்டும் வினாக்கள் அதிகம் இடம்பெறும். கடந்த கால தேர்வு முறை குளறுபடிகள் கண்டறியப்பட்டு, புகழ்பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.

குரு 5-ஆம் பார்வையால் சனியையும் ராகுவையும் பார்ப்பதால் விலைவாசி ஓரளவு குறையும். நாட்டில் பணப்புழக்கமும் மக்களின் வருமானமும் குறையும். தங்கம், வெள்ளி முதலான ஆபரணங்களின் விலை வீழ்ச்சியுறும் என்றாலும், 19.8.13-க்குப் பிறகு, அவற்றின் விலை அதிகரிக்கும். பெட்ரோ கெமிக்கல்களின் விலையும் சரியும். வாகன உற்பத்தி அதிகரிப்பால் வாகனங்களின் விலையும், டி.வி., ப்ரிட்ஜ், கம்ப்யூட்டர் மற்றும் செல்ஃபோன்களின் விலையும் குறையும். பாடப்புத்தகங்களின் விலை உயரும். ஆங்கில மோகம் அதிகமாகும்.  ஆசிரியர் தேர்வு முறை சற்றே எளிதாகும். சாஃப்ட்வேர் துறையில் வேலை வாய்ப்புகளும் ஊதியமும் குறைய வாய்ப்பு உண்டு. அயல்நாட்டில் இருப்பவர்களில் பலர் தாய்நாடு திரும்புவர். 2-வதாக திருமணம் புரிவது அதிகரிக்கும். புத்திரகாரகன் குரு, பகை கிரகமான புதனின் வீட்டில் அமர்வதால், கர்ப்பிணிகள் பாதிப்படைவர். குறிப்பாக 7-வது மாதத்தில் இருந்து பாதிப்புகள் அதிகரிக்கும். பிறந்தது முதல் ஒன்றரை வயது வரை உள்ள குழந்தைகளை புதிய நோய்கள் தாக்கும். குழந்தையின்மை அதிகமாகும். பங்குதாரர்களின் ஈகோ பிரச்னையால் பல தொழிற் சாலைகள் விற்பனைக்கு வரும்; வீழ்ச்சியடையவும் வாய்ப்பு உண்டு. விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாமையால் பாரம்பரிய குடும்பங்கள் நலிவடையும்.

தனகாரகன் குரு மிதுனத்தில் அமர்கிறார். எனவே, ரிசர்வ்
வங்கி அங்கீகரிக்காத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.
ஏலச்சீட்டு திட்டங்களிலும் சேர வேண்டாம். வங்கிகளில் வாராக் கடன்
அதிகரிக்கும். கடன் பெற்றுவிட்டு, தவணைத் தொகை கட்டாமல் வங்கி
நடவடிக்கைக்கு பலரும் ஆளாவார்கள். கறுப்புப் பணம் அதிகம் பிடிபடும்.
தீவிரவாதிகள், தொலைத்தொடர்பு சாதனங்களை நவீனமாகப் பயன்படுத்தி விபத்துகளை நிகழ்த்துவர். தொலைபேசி, அலைபேசி சேவைக் கட்டணங்கள் குறையும். அ, க, ஹ (கி,ரி,பி) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் ஊர்கள், மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகள் மற்றும் நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.
மேற்கண்ட எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் ஆரோக்கியத்திலும் பண விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அனைத்து மத வழிபாட்டுக் கூடங்களும் அசுர வேகத்தில் வளரும். வைணவ தலங்கள் பிரசித்தி அடையும். மூச்சுத் திணறல்,
மூளைக் காய்ச்சல், நுரையீரல் அழற்சி, சளித் தொந்தரவு, சிறுநீரகம் மற்றும் பித்தப்பை கற்களால் அதிகம்பேர் பாதிப்படைவர்.
குருப்பெயர்ச்சியால் தென்மேற்கு பருவ மழை அதிகரிக்கும். விடியற்காலையில் அதிக மழை பொழியும். பசு-கன்றுகள், பயிர்-
பச்சைகள், தோப்பு-தோட்டங்கள் வளம் அடையும். வன விலங்குகளும்
அபிவிருத்தியாகும். ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்கும். நிலங்களின் கைடு லைன் வேல்யூவை அரசு குறைக்கும். மின் தட்டுப்பாடு குறையும். புன்செய் நிலங்கள், நீர் நிலை ஆதாரங்களைப் பாதுகாக்க புதிய சட்டங்கள் வரும். பதுக்கல் தானியங்கள் பிடிபடும். கள்ளப் பணம் தயாரிப்பவர்கள் கையும் களவுமாகப் பிடிபடுவர். பாரதத்தின் பகை நாட்டு உளவாளிகள், தீவிரவாதிகள் காவல் துறையினரால் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். மலையாள, ஹிந்தி மொழியில் தயாராகும் திரைப்படங்கள் பிரபலமாகி விருதுகளைப் பெறும். விளையாட்டு வீரர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவர். எழுத்தாளர்கள்
நலிவடைவார்கள். பாராளுமன்றத் தேர்தலில், தேர்தலுக்குப் பிறகு புதிய
கூட்டணி உருவாகி ஆட்சி அமைக்கும். மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு
அதிகரிக்கும்.  

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
28.5.13 - 11.6.13 வரை மிருகசீரிடம் 3-ல்

2.6.13 - 25.6.13 வரை மிருகசீரிடம் 4-ல்

26.6.13 - 10.7.13 வரை திருவாதிரை 1-ல்

11.7.13 - 25.7.13 வரை திருவாதிரை 2-ல்

26.7.13 - 9.8.13 வரை திருவாதிரை 3-ல்

10.8.13 - 28.8.13 வரை திருவாதிரை 4-ல்

29.8.13 - 17.9.13 வரை புனர்பூசம் 1-ல்

18.9.13 - 19.10.13 வரை புனர்பூசம் 2-ல்

20.10.13 - 12.11.13 வரை புனர்பூசம் 3-ல்

13.11.13 - 30.11.13 வரை புனர்பூசம் 3-ல் வக்ர நிலை

1.12.13 - 2.1.14 வரை புனர்பூசம் 2-ல் வக்ர நிலை

3.1.14 - 26.1.14 வரை புனர்பூசம் 1-ல் வக்ர நிலை

27.1.14 - 11.3.14 வரை திருவாதிரை 4-ல் வக்ர நிலை

12.3.14 - 12.4.14 வரை திருவாதிரை 4-ல் இயல்பு நிலை

13.4.14 - 6.5.14 வரை புனர்பூசம் 1-ல்

7.5.14 - 25.5.14 வரை புனர்பூசம் 2-ல்

26.5.14 - 12.6.14 வரை புனர்பூசம் 3-ல்

பரிகாரம்:
குரு பகவான் சுய கௌரவம், தன்மானம், விடாமுயற்சி,
கல்வி, நுண்ணறிவு மற்றும் ஊடகங்களுக்கு உரிய கிரகமான புதனின் வீட்டில் அமர்கிறார். எனவே, மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் சுய முயற்சியிலும் உழைப்பிலும் முன்னேறப் பாருங்கள். பண வசதி இல்லாதவர்களின் உயர் கல்விக்கு உதவுங்கள்; குருவின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.


பலன் படிக்க அந்தந்த ராசியின் மீது க்ளிக் செய்யுங்கள் !












பிரஹஸ்பதி ஸ்தோத்திரம்
ஸ்காந்த புராணத்தில் உள்ள அற்புதமான ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால் வயிற்றுவலி, குன்மம் முதலான ரோகங்கள் விலகும். பலம், பொருள், ஸந்தானம், தீர்க்காயுள் கிட்டும். பாவங்கள் விலகும். கோசார ரீதியாக 1, 3, 8, 12 ஆகிய இடங்களில் குரு இருந்தாலும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவனாக இருந்தாலும்... அதனால் ஏற்படக்கூடிய தோஷங்களும் விலகும்.

ஸ்ரீ கணேஸாய நம:

குருர்ப்ருஹ ஸ்பதிர்ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர:

வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு: பீதாம்பரோ யுவா

ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக:

தயாகர: ஸெளம்யமூர்த்தி: ஸுரார்ச்ய: குட்மலத்யுதி:

லோகபூஜ்யோ லோககுருர் நீதிக்ஞோ நீதிகாரக:

தாராபதிஸ்சாங்கிரஸோ வேதவேத்ய: பிதாமஹ:

பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யேதானிய: படேத்

அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்நர:

ஜீவேத்வர்ஷஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி

ய: பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை:

புஷ்பதீபோபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்

ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடாஸாந்திர்பவேத் குரோ:

கருத்து:

குருவும், பிரஹஸ்பதியும், ஜீவனும், தேவர்களுக்கு
ஆசார்யரும், புத்திமான்களுள் சிறந்தவரும், வாக்குக்கு ஈஸ்வரரும், புத்தி ரூபியும், நீண்ட தாடி, மீசை உள்ளவரும், பீதாம்பரம் தரித்தவரும், யௌவனம் உள்ளவரும்...

அமிர்தமயமான பார்வை உள்ளவரும், கிரகங்களுக்குத்
தலைவரும், கிரகங்களின் பீடையைப் போக்குகிறவரும், கருணைக்கு
இருப்பிடமானவரும், அழகிய உருவம் கொண்டவரும், தேவர்களால் பூஜிக்கத் தகுந்தவரும், மொட்டு போன்ற காந்தியுள்ளவரும்...

உலகங்களால் பூஜிக்கத் தகுந்தவரும், லோக குருவும்,
நீதிசாஸ்திரம் அறிந்தவரும், நீதியைச் சொல்கிறவரும், அங்கிரஸ்ஸினுடைய புத்திரரும், வேதங்களால் அறியத் தகுந்தவரும், பிதாமகனுமாகத் திகழும் குருவின் நாமங்களை படிப்பவர்கள் ஆரோக்கியமாகவும், பலவானாகவும், ஸ்ரீமானாகவும், புத்திரவானாகவும் திகழ்வார்கள். அத்துடன், அவர்கள் 100 ஆண்டுகள் ஜீவித்திருப்பார்கள். பாவங்கள் விலகும். எவர் ஒருவர் வியாழக்கிழமையாகிய குருவாரம் அன்று சந்தனம், அக்ஷதம், வஸ்திரம் - இவைகளாலும், புஷ்பம், தீபம் முதலான உபகாரங்களாலும் பிரஹஸ்பதியை பூஜிப்பாரோ, அவ்வாறு பூஜித்து பிராமணர்களுக்கு போஜனமும் செய்து வைக்கிறாரோ, அவருக்கு குருவினால் ஏற்பட்ட பீடைகளும் விலகும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget