அட்சய திருதியை உருவான வரலாறு


வைகாசி மாதத்தில் நீர்தானம் செய்த அரசன் ஒருவனுடைய வரலாறு வியப்பூட்டும் வகையில் இருக்கிறது. பாஞ்சாலை நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். அவனுடைய நாடு திடீரென களை இழந்து வறட்சியை அடைந்தது. சேனைகள் நோயால் சேதமாயின. வேற்று நாட்டு அரசன் போரிட்டு நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு பூரியசஸ், அவனுடைய மனைவி சிகிநீ இருவரையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டான். காட்டுக்குச் சென்ற மன்னனும், ராணியும்
முப்பது ஆண்டுகள் சிரமப்பட்டனர். அந்த சமயம் மன்னன் தன் குருவின் நினைவாகவே இருந்தான். அப்போது தற்செயலாக அந்த வழியே யாஜகர், உபயாகர் ஆகிய இரு ஞானிகள் சென்றனர். பூரியசஸ் அவர்களைப் பார்த்து பரவசமாகி, அவர்களுடைய பாதங்களில் விழுந்து வணங்கி தன் நிலையைச் சொன்னான். 

மன்னனின் நிலை கண்டு மனம் இரங்கிய ஞானிகள், அவன் இந்த நிலையை அடைவதற்கு என்ன காரணம் என்று ஞானதிருஷ்டியினால் அறிந்து மன்னனிடம் சொன்னார்கள். அரசே நீ பத்து தலைமுறைகள் வேடனாக இருந்தாய். 

பத்தாவது பிறவியில் கவுட தேசத்துக் காட்டில் வசிக்கும் போது அந்த வழியாகச் செல்வோரின் பொருட்களை அபகரித்தும், சாதுக்களை அவமதித்தும் பல கொடுமைகளைச் செய்து வந்தாய். அதன் பயனைத்தான் இப்போது நீ அனுபவிக்கிறாய் என்றனர். அதைக் கேட்டு வேதனை அடைந்த பூரியசஸ், ஞானிகளே, இவ்வளவு கொடுமை செய்திருந்தும் நான் அரசனாக எப்படி பிறந்தேன்? என்று கேட்டான். 

அதற்கு ஞானிகள் மன்னா ஒரு சமயம் இரண்டு வியாபாரிகளும், ஒரு ஏழையும் இந்தக் காட்டு வழியே செல்லும் போது நீ அவர்களை அடித்துத் துன்புறுத்தினாய். இதனால் இரண்டு வியாபாரிகளும் இறந்து விட்டனர். அந்த ஏழை மட்டும் பொருட்களுடன் தப்பி ஓடினார். நீ அவரை துரத்தி கொண்டு ஓடும் போது, கீழே விழுந்து மயக்கம் அடைந்தார்.

பொருள் மேல் உள்ள ஆசையால் நீ அவரை தூக்கி நீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினாய். உன்னை அறியாமலேயே உன்னுடைய காரியத்திற்காகச் செய்த நீர் தானம் வைகாசி மாதத்தில் நடந்தது. அந்த புண்ணியத்தினால் நீ அரசனாக பிறந்தாய் என்று முடித்தனர். 

வைகாசி மாதத்தில் அறிந்தோ அறியாமலோ செய்யும் சிறிது நீர் தானத்திற்கு இவ்வளவு மகிமையா என்று வியந்த அரசன் தன் முற்பிறவிகளை நினைத்து மனம் நொந்து, காட்டில் வசித்தபடியே ஸ்ரீ ஹரியைத் தியானம் செய்தான். 

வெயிலில் வருவோருக்கு நிழல் கொடுத்து, நீர் தானமும் அளித்து நல்ல செயல்களைச் செய்து வந்தான். சில நாட்களில் மன்னனின் உறவினர்கள் அவனைத் தேடி வந்து அவனுக்கு துணை புரிவதாகக் கூறினர். அவனது அரசும் அவனை அடைந்தது. 

மன்னனும் பலகாலம் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து, ஐந்து புதல்வர்களைப் பெற்று இன்பமாக இருந்து வரும் போது ஸ்ரீ நாராயணனே தரிசனம் அளித்தார். மன்னா என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். இறைவா உங்களிடம் மாறாத பக்தியும் நாராயண நாமத்தைத் தவிரவேறு எதுவும் உச்சரிக்காத நாவும் வேண்டும் என்றான். 

ஸ்ரீநாராயணன் மன்னன் வேண்டியபடியே வரம் தந்து மறைந்தார். பூரியசஸ் மன்னனுக்கு மகாவிஷ்ணு தரிசனம் அளித்த நாள் திருதியை என்பது குறிப்பிடத்தக்கது. அன்று செய்யும் தான தருமங்கள் அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால், அன்று முதல் அந்த திரிதியை நாளை அட்சய திருதியை என்று அழைத்தனர்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget