மார்பக அறுவை சிகிச்சை பற்றி உங்களுக்கு தெரியுமா?

மார்பகங்கள் பெண்களின் உடலில் அதிக கவனத்துடன் பராமரிக்கவேண்டிய முக்கியமான உறுப்பாகும். முதலில் பால் சுரப்பு நாளங்கள் உருவாகும். அவைகளை சூழ்ந்து கொழுப்பு திசுக்களோடு மார்பக தசை வளரும். அதில் இருக்கும் கொழுப்புக்கு தக்கபடி மார்பகத்தின் அளவும், வடிவமும் தோன்றும். மார்பகங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை. 
ஒரு மார்பகம் வளர்ந்துகொண்டிருக்கும்போது இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால் இயற்கையாகவே இரண்டிற்கும் இடையே சிறிய வித்தியாசம் இருக்கும். சிலருக்கு உடலுக்கு பொருத்தமில்லாத அளவுக்கு மார்பகங்கள் சிறுத்து காணப்படும். 

சிலருக்கு மிக பெரிதாகி, முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆபரேஷன் செய்து தேவையான அளவில் மார்பகங்களை வடிவமைத்துக்கொள்ளலாம். மார்பக புற்றுநோயின் தாக்கம் கொண்டவர்கள் மார்புகளை நீக்கிவிட்டு, பொருத்தமான அளவில் செயற்கை மார்பகத்தை உடலுக்குள் இணைத்துக்கொள்ளலாம். 

மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சையில் ‘என்டோஸ் கோபி‘யின் பங்களிப்பு இன்றியமையாதது. முன்பெல்லாம் மார்பகத்தின் அடிப்பகுதி 5 செ.மீ. அளவுக்கு வெட்டப்பட்டு, உள்ளே சிலிகான் பை வைக்கப்படும். இதனால் சிறிய அளவில் தழும்பு தெரியும். 

ஆனால் என்டோஸ்கோபி மூலம் தொப்புளில் ஒரு துளை போட்டு, அதன் உள்ளே தேவையான கருவிகளை செலுத்தி, தோலின் அடிப்பகுதி வழியாக மார்பகம் வரை கருவியை கொண்டு செல்லலாம். அங்கு அறுவை சிகிச்சைக்கான இடத்தை உருவாக்கி, உப்பு நீர் கரைசல் அடங்கிய பையை செலுத்தி மார்பகம் பெரிதாக்கப்படும். 

இதனால் தழும்பு வெளியே தெரியாது. சிலிக்கானாலான செயற்கை மார்பகம், இயற்கை மார்பக வடிவத்திலேயே இருக்கும். சிலிக்கான் மார்பகத்தை மார்புக்கூட்டிலிருக்கும் தசைக்குக் கீழ் வைத்து, தைத்துவிடுவார்கள். மார்பகமே சரிவர அமையாத பெண்களும் உண்டு. 

அவர்களால் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பால் புகட்ட முடியாது. அவர்களது மார்பகங்களை பெரிதாக்கி, பால் புகட்டும் நிலையை உருவாக்கலாம். ஆண்களைப்போல் தட்டையான மார்பகத்தை கொண்டவர்களுக்கு செயற்கை மார்பகத்தை இம்ப்ளாண்ட் முறையில் பொருத்தவேண்டும். 

சில பெண்களுக்கு இயற்கையாகவே பெரிய மார்பகங்கள் அமைந்துவிடுகின்றன. அதனால் அவர்கள் மற்றவர்கள் முன்னால் நடக்கவே தயங்கும் நிலை ஏற்படுகிறது. அவர்களது மார்பகங்களின் அடிப்பகுதியில் இருக்கும் கொழுப்பை 'லிப்போசக்ஷன்' முறையில் அகற்றும்போது அளவு குறைந்துவிடும். 

இந்த சிகிச்சை செய்துகொள்ளும் பெண்கள், குழந்தைகளுக்கு பால் புகட்டுவதிலும் எந்த நெருக்கடியும் ஏற்படாது. தாய்க்கு மார்பக புற்றுநோய் இருந்தால், பாரம்பரிய அடிப்படையில் மகள்களுக்கும் அந்த நோய் ஏற்படலாம். அதனால் பலர் இப்போது நவீன விஞ்ஞான பரிசோதனை முறைகளை கடைபிடித்து, தாயிடம் இருந்து அந்த நோய்க்கான ஜீன் தனக்கு வந்திருக்கிறதா என்று கண்டு பிடிக்கிறார்கள். 

அந்த ஜீன் தோன்றி, எதிர்காலத்தில் தாக்கும் சூழல் பெருமளவு இருந்தால் நடிகை ஏஞ்சலினா ஜோலி போன்று மார்பகங்களை நீக்கிவிட்டு, சிலிக்கான் மார்பகங்களை பொருத்திக்கொள்ளலாம். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

முதலிலே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், மார்பகத்தில் புற்றுநோய் கட்டி அளவிற்கு மேல் வளர்ந்துவிடும். அப்போதும் மார்பகத்தை அகற்றுவதைதவிர வேறுவழியில்லை. நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை, வயது, தாக்கியிருக்கும் புற்றுநோயின் வகை, இதுவரை நடைபெற்ற சிகிச்சை, அடுத்து செய்யப்போகும் சிகிச்சை போன்ற வைகளை கருத்தில்கொண்டு மார்பகத்தை அகற்றும் முடிவுக்கு டாக்டர்கள் வருவார்கள். 

மார்பகம் பெரிதாக இருந்து, கட்டி சிறிதாக இருந்தால், மார்பகத்தின் முழு பகுதியையும் வெட்டி அகற்றாமல் கட்டியை மட்டுமே அகற்றும் அறுவைசிகிச்சையும் நடை முறையில் உள்ளது. அதற்கு லம்ப்பக்டமி என்று பெயர். கட்டி பெரிதாக இருந்து, மார்பகம் சிறியதாக இருந்தால் மார்பகத்தை அகற்ற வேண்டியதாகிவிடும். 

இது மாஸ் டக்டமி என்று பெயர். பெண்கள் மார்பகத்தை இழப்பது என்பது இயல்பான காரியம் அல்ல. அவர்கள் பெண்மையின் அடையாளத்தையே இழந்ததுபோல் உணர்வார்கள். ஆனால் அவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் செயற்கை மார்பகங்கள் பொருத்திக்கொண்டு, நடிகை ஏஞ்சலினா ஜோலிபோல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளலாம். 

அவ்வாறு பொருத்தப்படும் மார்பகங்கள் இயற்கை போன்றே சிறப்பாக தோன்றும். மார்பகம் சீரமைக்கப்பட்ட பெண்களின் திருமண வாழ்க்கை, எப்போதும் போல் இயல்பாய் இருக்கும். அவர்கள் வழக்கம் போல் குழந்தைகளுக்கு தாய்ப்பாலும் கொடுக்கலாம். 

மார்பழகிற்காக அதிகமாக செய்யப்படும் சிகிச்சை முறை ‘பிரெஸ்ட் லிப்ட்’ எனப்படுகிறது. இது எடுப்பாக நிமிரச்செய்ய செய்து கொள்ளும் ஆபரேஷனாகும். சாதாரணமாக தினமும் 'பேடு' உபயோகித்து மேம்படுத்த விரும்பாத பெண்கள், இந்த அறுவை சிகிச்சை முறையில் 'ஜெல்'லை செலுத்தி மார்பை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். 

ஜெல்லுக்கு பதிலாக அவர்கள் உடலில் இருந்தே கொழுப்பை எடுத்து பயன்படுத்தியும் மார்பழகை மேம்படுத்தலாம். பெரும்பாலான ஆலிவுட் நடிகைகள் இதனை செய்திருக்கிறார்கள். இந்தி நடிகைகளும் இந்த ஆபரேஷன் மூலம் அழகு மேம்பாடு அடைந்திருக்கிறார்கள். விபத்து, நோய், பிறவியிலே ஏற்படும் அழகு குறைபாடுகளால் பெண்கள் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். 

மார்பகங்கள் மட்டுமின்றி கன்னங்கள், உதடு, மூக்கு போன்ற பல்வேறு உறுப்புகளிலும் அழகை அதிகரிக்கும் ஆபரேஷன்கள் செய்து, குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் போது அவர்கள் அழகோடு தன்னம்பிக்கையும் பெறுகிறார்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget