சில்லுனு ஒரு சந்திப்பு சினிமா விமர்சனம்


விமல், ஓவியா இருவருமே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வருகிறார்கள். முதலில் மோதிக்கொண்டாலும் பிறகு இருவரும் காதலர்களாகி விடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஓவியாவின் தந்தை வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வதால் ஓவியாவின் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்கள். இதனால் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய, போலீஸ் நிலையம் சென்று தஞ்சம் அடைகிறார்கள். ஆனால், போலீசோ இவர்களின் பெற்றோரை
அழைத்து சமாதானம் பேசுகிறார்கள். ஆனால் யாரும் சமாதானம் அடைய்வில்லை. பின்னர், இருவரும் படித்து முடித்து நல்ல நிலைமைக்கு வந்தபிறகு உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறோம் என போலீசார் வாக்குறுதி அளித்த பின்பு கலைந்து செல்கின்றனர். 

சில வருடங்களுக்குப் பிறகு வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் விமல், சொந்த ஊருக்கு திரும்புகிறார். ஒரு பேருந்து பயணத்தின்போது எதேச்சையாக தீபாஷாவை சந்திக்கிறார். முதல் சந்திப்பே விமலுக்கு அவள் மீது காதல்வர, அவளையே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். 

தீபாஷா தன்னுடைய அண்ணியின் தங்கைதான் என்று விமலுக்கு தெரியவருகிறது. இதையடுத்து இருவருமே காதலிக்க தொடங்கி விடுகிறார்கள். இந்நிலையில், இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவெடுக்கிறார்கள். அதன்படி நிச்சயதார்த்தமும் நடைபெறுகிறது. 

நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள விமலின் பள்ளிக்கூட ஆசிரியர் வருகிறார். பள்ளி பருவத்தில் ஏற்பட்ட விமலின் காதல் அனுபவத்தை அவருடைய குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்கிறார். இதைக் கேட்ட தீபாஷா விமலின் மீது வெறுப்பு கொள்கிறார். உடனே திருமணத்தை நிறுத்தவும் முடிவு செய்கிறார். விமல் தீபாஷாவை சமாதானப்படுத்த முயலுகிறார். ஆனால், சமாதானமாகாத தீபாஷா திருமணத்தை நிறுத்திவிட்டு சென்னைக்கு சென்றுவிடுகிறாள். 

விமலும் வெளிநாடு செல்ல முடிவெடுத்து, சென்னை வருகிறார். சென்னையில் தற்செயலாக ஓவியாவை சந்திக்கிறார். அங்கு, ஓவியாவும் தீபாஷாவும் நண்பர்களாக இருக்கிறார்கள். இது விமலுக்கு தெரியவருகிறது. 

அதன்பின் என்ன நடந்தது? ஓவியா-விமலின் பள்ளிப்பருவ காதல் ஒன்று சேர்ந்ததா? தீபாஷா மனம் மாறி விமலை ஏற்றுக் கொண்டாரா? என்பதே மீதிக்கதை. 

வழக்கமான முக்கோண காதல் கதைதான். அதை நிறைவாக சொல்லமுடியுமால் நிறைய இடங்களில் தடுமாறியிருக்கிறார் இயக்குனர். சீரியசான காதல் கதையில் நகைச்சுவை காட்சிகளை புகுத்தி சுவாரசியத்தை குறைத்துவிட்டார்கள். 

விமல் படத்தில் பள்ளிக்கூட மாணவராகவும், வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் பையனாகவும் நடித்திருக்கிறார். எல்லா காட்சிகளிலும் ஒரேமாதிரியே பேசுகிறார். எப்போது காதல் செய்கிறார், எப்போது சோகத்தை வெளிப்படுத்துகிறார் என்றே தெரியவில்லை. 

விமலின் காதலியாக தீபாஷா. அழகாக இருக்கிறார். ஆனால் பரிச்சயமான முகம் மாதிரி தோன்றவில்லை. காதல் பார்வை பார்க்கும் போதெல்லாம் ரசிக்க வைக்கிறார். மற்ற காட்சிகளில் ஒரே மாதிரிதான் நடிக்கிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். 

விமலின் பள்ளிக்காதலியாக ஓவியா. மாணவியான தோற்றத்திலும், நடிப்பிலும் ரசிக்க வைக்கிறார். இவரின் கதாபாத்திரம்தான் படத்தை தாங்கி நிற்கும் ஒன்று. அதை நிறைவாக செய்திருக்கிறார். 

படத்தில் நகைச்சுவையை மனோபாலா மட்டுமே தாங்கி நிற்கிறார். இவருடைய காட்சிகள் வரும்போதெல்லாம் வசனத்திலேயே வயிரை பதம் பார்க்கின்றன. 

பைசல் இசையில் பாடல்கள் பார்க்கும்போது ஓரளவிற்கு பிடித்தாலும், வெளியில் வந்தால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ராஜேஷ் யாதவ், ஆரோ ஒளிப்பதிவு பளிச் ரகம். ஹீரோயின்களை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget