
உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை இன்று முடக்க இருப்பதாக சமூக விரோதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரொனால்டு கே. நோபல் எச்சரித்தார். சி.பி.ஐ. (மத்திய புலனாய்வுத் துறை) இயக்குநராகப் பணியாற்றிய டி.பி. கோலியின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இண்டர்போல் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரோனால்டு கே. நோபல் கலந்து கொண்டு பேசியதாவது:
இணையதளங்களில் "அனானிமஸ்' (அநாமதேயம்) என்ற பெயருடன் ஒருவித தாக்குதலை நடத்த சர்வதேச சைபர் குற்றவாளிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக என்னை எச்சரித்தும் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இண்டர்போலுக்கு சவால் விடும் வகையில் எனது தந்தை குறித்த விவரங்கள், வீட்டு தொலைபேசி எண் போன்றவற்றையும் அவர்கள் இணையம் வாயிலாக இடைமறித்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அவர்களின் நோக்கம் உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை அரை நாளாவது வரையாவது முடக்க வேண்டும். அதன் மூலம் உலக நாடுகளுக்கு இழப்பு ஏற்பட வேண்டும் என்பதுதான். இதற்காக அவர்கள் இலக்கு வைத்துள்ள நாள் மார்ச் 31, 2012.
உலகம் முழுதும் 31 பேர் கைது:
யார் இந்த சதி வேலையில் ஈடுபடுகிறார்கள் என்று சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்வதேச அளவில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்.
இந்தக் குழுக்கள் கொலம்பியா, சிலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். இதையடுத்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் 31 பேர் உலகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆபரேஷன் பிளாக் அவுட்
"ஆபரேஷன் பிளாக் அவுட்' அவர்களிடம் விசாரணை நடத்தியதில், "ஆபரேஷன் பிளாக் அவுட்' என்ற பெயரில் உலகம் முழுவதும் இணையம் வாயிலாகத் தாக்குதல் நடத்தி இண்டர்நெட் சேவையை முடக்க முயற்சி மேற்கொள்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் சைபர் குற்றங்களை முறியடிக்க தனியொரு நாடால் முடியாது. உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும்.