தி கிட் வித் ய பீக் ஹாலிவுட் சினிமா விமர்சனம்


பனிரெண்டு வயதான சிறுவன். அம்மா இல்லை. அப்பா மட்டும். அவரும் பொருளாதார சூழ்நிலை காரணமாக பையனை தவிர்க்கிறார். மகன் கஷ்டப்பட்டு தந்தையின் இருப்பிடத்தை கண்டு பிடித்து அவரைப் பார்க்க செல்கிறான். தந்தை உபசரிக்கிறார். ஆனால் இங்கு என்னை தேடி வராதே, சிறுவர்களுக்கான ஹோம்தான் இனி உனக்கு எல்லாம் என்று அவர் மகனிடம் சொல்ல வேண்டும். மகனின் ஒரே உறவு அவர் மட்டுமே. பையனுக்கு வயது பனிரெண்டு.
இந்தக் காட்சியில் தந்தைக்கும் மகனுக்கும் தலா இரண்டு க்ளோஷ் அப் ஷாட்கள், பின்னணியில் வயலின், கண்ணீருடன் மகன் ஸ்லோமோஷனில் வெளியேற அவுட் ஆஃப் போகஸில் தந்தையின் உருவம் என்று உணர்ச்சிகளை பிழிந்திருக்கலாம். ஆனால் பெல்ஜியம் சகோதரர்களான Jean - Pierre Dardenne, Luc Dardenne அந்த வாய்ப்பை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார்கள். இந்த அண்டர்ப்ளே அல்லது இந்த யதார்த்தமான ப்ளேதான் அவர்களுக்கு கேன்ஸில் கிராண்ட் பிரிக்ஸ் பரிசை பெற்றுத் தந்தது.

நேரடியாக எந்த உள்ளுறைகளும் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் படம்தான் தி கிட் வித் ஏ பைக். சிரில் சிறுவர்களுக்கான ஹோமில் இருக்கும் சிறுவன். தனது தந்தைக்கு போன் செய்யும்படி அங்குள்ள நிர்வாகிகளை தூண்டிக் கொண்டே இருக்கிறான். அவனது தந்தை தனது பழைய இருப்பிடத்தை காலி செய்துவிட்டார், அவரின் புதிய முகவரி தெரியவில்லை என்கிறார்கள் நிர்வாகிகள். சிரில் நம்பத் தயாராகயில்லை. ஒருநாள் யாருக்கும் தெரியாமல் ஹோமைவிட்டு வெளியேறுகிறான். தந்தையின் பழைய இருப்பிடத்தில் அவரை தேடும்போது நிர்வாகிகளும் அவனைத் தேடி வந்துவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க மருத்துவமனை ஒன்றுக்குள் நுழைபவன் அங்கிருக்கும் சமந்தா என்ற பெண்ணின் மேல் மோதுகிறான். நிர்வாகிகள் அவனது தந்தையின் பழைய இருப்பிடத்தை திறந்து காட்டுகிறார்கள். அங்கு யாரும் இருப்பதற்கான தடயம் இல்லை. சிரில் தனது சைக்கிள் குறித்து விசாரிக்கிறான்.

மறுநாள் அந்தப் பெண் சமந்தா சிரிலின் சைக்கிளுடன் ஹோமுக்கு வருகிறாள். அவனது தந்தை வேறொருவருக்கு அந்த சைக்கிளை விற்றுவிட்டதாகவும், அவன் சொன்ன அடையாளத்தை வைத்து அதை வாங்கியவரிடமிருந்து தான் வாங்கியதாகவும் கூறுகிறாள். தந்தை தனது சைக்கிளை விற்றிருக்க மாட்டார் என்பது சிரிலின் நம்பிக்கை. சைக்கிள் அவனது ஒரு உறுப்பு போல. சமந்தா யாரிடமிருந்து சைக்கிளை வாங்கினாளோ, அந்த நபர் சைக்கிளை அவனது தந்தையிடமிருந்து திருடியிருக்க வேண்டும் என்கிறான். வார இறுதியில் அவளுடன் தங்கியிருக்க அனுமதிப்பாளா என்றும் சமந்தாவிடம் கேட்கிறான் சிரில்.

சமந்தாவின் வீட்டிற்கு - வீட்டிலேயே பியூட்டி பார்லர் வைத்திருக்கிறாள் சமந்தா - வந்த பிறகு தந்தையை விசாரிக்க ஆரம்பிக்கிறான் சிரில். அவர் சைக்கிளை விற்பதற்காக ஒட்டியிருந்த அறிவிப்பை பார்க்க நேரிடுகிறது. அதிலிருந்த முகவரியை வைத்து சமந்தாவுடன் அவரைத் தேடிச் செல்கிறான். அடுத்து வருவது நாம் முதல் பாராவில் சொன்ன விஷயங்கள். 

தந்தையின் புறக்கணிப்புக்கு பின் சிரிலின் உலகம் மாறிவிடுகிறது. அவனது பிடிவாதம் முன்பை காட்டிலும் அதிகரிக்கிறது. நடுவில் டீலர் என்றழைக்கப்படும் குட்டி தாதாவுடன் நட்பு ஏற்படுகிறது. சமந்தா அதனை தடுக்கிறாள். ஆனால் அவளுக்கு தெரியாமல் டீலருக்காக கடை வைத்திருக்கும் ஒருவரை தாக்கி அவரது பணத்தை திருடுகிறான். தடுக்க வரும் அவரது மகனையும் சிரில் தாக்குகிறான். சிரிலை அவர்கள் பார்த்துவிட்டதால் தானும் மாட்டிக் கொள்வோம் என்று சிரிலை எச்சரித்து சிறிது பணமும் தந்து சென்று விடுகிறான் டீலர். சிரில் தந்தையைத் தேடிச் சென்று பணத்தை தருகிறான். போலீஸிடம் இதுபற்றி ஒருபோதும் கூறமாட்டேன் என்றும் கூறுகிறான். தந்தை பணத்தை வாங்கிய வேகத்தில் அவனிடம் திருப்பித் தந்து என்னை ஜெயிலுக்கு அனுப்ப பார்க்கிறாயா என்று சிரிலை அங்கிருந்து அனுப்பி விடுகிறார். 

சிரில் திருடிய பணத்திற்கும், அவர்களை தாக்கியதற்கும் நஷ்டஈடு தர சமந்தா முன்வருகிறாள். சிரில் தான் தாக்கியவரிடம் மன்னிப்பு கேட்கிறான். அவரும் மன்னிக்கிறார். ஆனால் அவரது மகன் சிரிலை மன்னிப்பதாக இல்லை. தெருவில் அவனை பார்ப்பவன் துரத்தி சென்று அடிக்கிறான். தப்பிக்க மரத்தில் ஏறுகிறான் சிரில். கடைக்காரரின் மகன் எறியும் கல் சிரிலை தாக்குகிறது. கீழே விழுந்துவிடுகிறான். அவனிடம் எந்த சலனமும் இல்லை. பயந்துபோய் சிரிலை தாக்கியவன் தனது தந்தையிடம் சொல்கிறான். அவர் சிரில் விழுந்து கிடக்கும் இடத்திற்கு வந்து சிரிலை தாக்கிய அந்தக் கல்லை தூர வீசி எறிகிறார். ரோட்டில் தங்களைப் பார்த்த சிரில் டீஸ் செய்துவிட்டு ஓடியதாகவும், மரத்தில் ஏறிய போது தவறி விழுந்துவிட்டதாகவும் போலீஸிடம் சொல்லச் சொல்கிறார். இந்த நேரத்தில் சிரில் மயக்கம் தெளிந்து எழுந்து மண்ணை துடைத்துவிட்டு அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிடுகிறான்.

87 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படத்தின் முக்கியமான பகுதி சிரில் தரும் பணத்தை அவனது தந்தை ஏற்க மறுப்பது. அதன் பிறகு சிரில் சமந்தா சொல்லும் அனைத்தையும் கேட்கக் கூடியவனாக மாறுகிறான். மன்னிப்பு கேட்கிறான். தன்னை தாக்கியவனை திருப்பி தாக்கும் எண்ணமும் அவனுக்கு இல்லாமல் போகிறது. 

இந்தப் படத்தைப் பார்த்த பலரும் கஷ்டப்பட்ட நிலையிலும் திருட்டுப் பணத்தை அவனது தந்தை ஏற்க மறுத்த நற்குணமே சிரிலை மாற்றியது என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் சகோதர இயக்குனர்கள் அப்படி எதையும் படத்தில் காண்பிக்கவில்லை. என்னை ஜெயிலிலுக்கு அனுப்பப் பார்க்கிறாயா என்று சொல்லிதான் அவர் பணத்தை திருப்பித் தருகிறார். சிரில் இந்த திருட்டினால் எத்தகைய பாதிப்புக்குள்ளாகப் போகிறான் என்பதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அங்கிருந்து அவனை துரத்துவதிலேயே கவனமாக இருக்கிறார். இந்த சுயநலம் அல்லது புறக்கணிப்பு சிரிலுக்கு யதார்த்த உண்மையை உணர்த்திவிடுகிறது என்று எடுத்துக் கொள்ளவே அதிக சாத்தியமுள்ளது. அதுவரை தந்தை என்ற ஒரு கற்பனை ஆதரவு அவனை தொடர்ந்து கொண்டே வருகிறது. அதுதான் அனைவரிடமும் அடங்காமல் நடந்து கொள்ள அவனுக்கு ஆதாரமாகவும் இருந்தது. அந்த கற்பனை தந்தையிடம் பணத்தை தந்த இரவு முற்றிலுமாக உடைகிறது.

இதன் பிறகு வரும் காட்சியை இப்படத்தின் அதிஉன்னத காட்சி என்று சொல்லலாம். சிரில் தனது சைக்கிளில் வீடு திரும்பும் காட்சி. சிரிலுக்கு இணையாக வரும் கேராவின் நகர்வும், அந்த அமைதியும் அவனது மாற்றத்தை மௌனமாக சொல்லிவிடுகிறது. கதாபாத்திரங்களுடன் இணைந்து பயணிக்கும் கேமரா - குறிப்பாக சிரில் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் எடிட்டிங். எந்த காட்சியையும், வசனத்தையும், கதாபாத்திரத்தையும் முக்கியத்துவப்படுத்தாத ஒருவகையான ஆற்றொழுக்கான மேக்கிங். சாதாரணத்துக்குள் இருக்கும் அசாதாரணம்.

படத்தில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே இசை வருகிறது. குறிப்பாக தந்தை பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பும் காட்சி.

சமந்தாவுக்கும் சிரிலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆனால் அவனது அடாவடியை நம்ப முடியாத பொறுமையுடன் அவள் சகித்துக் கொள்கிறாள். தனது காதலனையே சிரிலை முன்னிட்டு அவள் இழக்க நேர்கிறது. இந்த காரண காரியமில்லாத பொறுமையும், சகிப்புத்தன்மையும் சில நேரம் நம்மை திகைக்க வைக்கிறது. 

இந்தப் படம் பெல்ஜியம் சகோதர இயக்குனர்களுக்கு 2011 ஆம் ஆண்டுக்கான கிராண்ட் பிரிக்ஸ் - ஜுரி விருது - பெற்றுத் தந்தது. (Once upon a time in Anatolia படமும் இப்பரிசுக்கு அதே வருடம் தேர்வாகி இருவரும் விருதை பகிர்ந்து கொண்டனர்). நல்ல படம் என்பதுடன் உணர்ச்சிகளை பிழிந்தெடுக்கும் இயக்குனர்கள் பார்க்க வேண்டிய படமும்கூட.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget