கோலிவுட்டை கலக்கும் பெண் இயக்குனர்கள்

சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் சினிமாவுக்கு வருவதும், முதல்படத்திலேயே ஹிட் அடித்து விடுவதும் நடந்து வருகிறது. இளைஞர்களைப் போலவே இளம் பெண் இயக்குனர்களும் சினிமாவுக்கு வருகிறார்கள். அடுத்தடுத்து அவர்களின் படங்கள் வர இருக்கிறது.

செளந்தர்யா ரஜினிகாந்த்

அதில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா. அவர்தான் சூப்பர் ஸ்டார் நடிக்கும் கோச்சடையான் படத்தை டைரக்டர் செய்து வருகிறார். மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் அவதார் படம் போன்று கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். 100 கோடியை தாண்டிய பட்ஜெட். முதன் முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம். சூப்பர் ஸ்டார், தீபிகா படுகோனே. சரத்குமார் என்ற நட்சத்திரப் பட்டாளம். வருகிற தீபாவளிதான் சவுந்தர்யாவுக்கு சினிமாவில் தலைத் தீபாவளி.

ஐஸ்வர்யா தனுஷ்

அடுத்து அவரது அக்கா ஐஸ்வர்யா. அவர் 3 படத்தை கணவர் தனுசை வைத்து இயக்கினார். படம் சரியாக போகவில்லை என்றாலும் அதில் இடம்பெற்ற கொலைவெறி பாடல் உலக புகழ் அடைந்தது. அடுத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கப்போகிறார். அக்கா தங்கையில் யார் டைரக்டர் நாற்காலியில் நிரந்தரமாக உட்காரபோகிறார்கள் என்பது விரைவில் தெரிந்து விடும்.

கிருத்திகா உதயநிதி

இப்போது மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி இருப்பவர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி. சில சார்ட் பிலிம்களை இயக்கிய அனுபத்தைக் கொண்டு அவரும் படம் இயக்கிவிட்டார். வணக்கம் சென்னையின் பாடல்கள் வெளியாகி பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.  படத்தையும் ஆவலாக எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

ரோகினி

நடிகை ரோகினி சத்தமே இல்லாமல் அப்பாவின் மீசை என்ற படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கிறார். அதனை தயாரிப்பவர் இயக்குனர் சேரன். பசுபதி, நித்யாமேனன் உள்ளிட்ட நட்சத்திரகங்ள் நடிக்கிறார்கள். ரோகினியும் நிறைய சார்ட் பிலிம் இயக்கி அனுபவம் பெற்றவர். அப்பாவுக்கும் மகனுக்கும் உள்ள உறவை பற்றிய படம்.

நந்தினி

சத்யம் தியேட்டர் நிர்வாகம் தயாரித்த திருதிரு துறுதுறு என்ற படத்தை இயக்கிய நந்தினி இப்போது கொலை நோக்கு பார்வை என்ற காமெடி த்ரில்லரை இயக்கிக் கொண்டிருக்கிறார். வல்லமை தாராயோ, கொலை கொலையா முந்திரிக்கா போன்ற காமெடி படங்களை டைரக்ட் செய்த மதுமிதா அடுத்து ஒரு இந்திப் படத்தை டைரக்ட் செய்யப்போகிறார். இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வுக்கு அடிக்கடி மும்பை பறந்து கொண்டிருக்கிறார்.

சினேகா பிரிட்டோ

சட்டம் ஒரு இருட்டறையை ரீமேக் செய்த சினேகா பிரிட்டோ இப்போது சும்மா நச்சுனு இருக்கு என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து ஒரு பக்கா கமர்ஷியல் படம் ஒன்றை டைரக்ட் செய்யப்போகிறார். இதற்கான ஸ்கிரிப்ட் வேலையில் இப்போது சீரியசாக இருக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

இளம் பெண்கள் என்ற வரைமுறைக்குள் வராவிட்டாலும் ஆரோகணம் படத்தின் மூலம் தன்னை இயக்குனராக நிரூபித்துக் கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். அதில் சின்ன சின்ன ஆசை மதுபாலா நடிக்கப்போகிறார். நடிகை அம்பிகா மலையாளத்தில் நிழல் என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். அது தமிழிலும் வரப்போகிறது. கவர்ச்சி நடிகை ஷகிலா மலையாளத்தில் நீலத்தாமரா என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். அடுத்து அவரது இலக்கு தனது வாழ்க்கை கதையை தமிழில் இயக்க வேண்டும் என்பது. இவர்கள் தவிர வேறு சிலரும் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அகத்தியன் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி, காவ்யா மாதவன், மீரா ஜாஸ்மின், சாயாசிங், குஷ்பு, ராதிகா, ஆகியோர் இயக்குனர் ஆகும் ஐடியாவில் இருக்கிறார்கள்.

இந்த பெண் இயக்குனர்கள் படையில் வெற்றிக்கொடி பறக்கவிடப்போவது யார் என்பது அவர்கள் எடுக்கும் படத்தில் இருக்கிறது. பொதுவாக பெண் இயக்குனர்கள் காமெடி படம் அல்லது குடும்ப சென்டிமெண்ட் படம்தான் எடுப்பார்கள் என்ற சூழ்நிலை உள்ளது. அதை யார் உடைக்கிறார்கள் என்பது இவர்களின் படங்கள் வெளிவந்ததும் தெரிந்து விடும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget