ரசிகர்களை வசியம் செய்யும் அனுபமா

தமிழ் கூறும் திரையுலகிற்கு, கேரளாவிலிருந்து மற்றும் ஒரு வரவு, அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி,
கேரள ரசிகர்களை வசியம் செய்த அனுபமா, இப்போது, தமிழக ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடிக்க, கொடி படத்தின் மூலம் கால் பதித்துள்ளார்; அவருடன் ஒரு சந்திப்பு:

பிரேமம் படத்தில் உங்களுக்கு கிடைத்த பிரபலம் பற்றி...

என் வாழ்க்கையையே இந்த படம், புரட்டிப் போட்டு விட்டது. என் வாழ்க்கையை, பிரேமத்திற்கு முன்; பிரேமத்திற்கு பின் என, இரண்டாக பிரிக்கலாம். இந்த படத்தில் நடிப்பதற்கு ஏராளமான புதுமுகங்கள் பரிசீலிக்கப்பட்டு, கடைசியாக நான் தேர்வானேன்.

தமிழில் முதல் படமே, தனுஷ் கூட நடிக்கிறீங்க. எப்படி உணர்கிறீர்கள்?

பிரேமம் படத்துக்கு பின், தெலுங்கில், அ ஆ என்ற படத்தில் நடித்தேன். அப்போது, இயக்குனர் செந்தில், கொடி படத்தில் நடிப்பதற்கு அழைத்தார். தனுஷ் ஜோடியாக நடித்ததை, இப்போது கூட நம்ப முடியவில்லை.

தனுஷுடன் முதல்நாள் படப்பிடிப்பு எப்படி இருந்தது?

முதல் இரண்டு நாட்கள், ரொம்பவே பயந்து நடுங்கினேன்; பதற்றம் இருந்தது; அப்புறம், தனுஷ், எனக்கு தைரியம் அளித்ததுடன், சில உதவிகளையும் செய்தார். இந்த படத்தில், நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். தனுஷை நேரில் பார்க்கும்போது, அவரது ரசிகையாகி விட்டேன். பிரேமம் படத்தில் நடித்ததற்கும், கொடி படத்திற்கும் நிறைய வித்தியாசம். இந்த படத்தில், துரு துரு பெண்ணாக நடித்திருக்கிறேன்.

பெரும்பாலும், இரண்டு ஹீரோயின் படங்களில் தான் நடிக்கிறீர்கள் போல...

இப்போதுதான், சினிமாவுக்கு வந்திருக்கிறேன். தனி ஹீரோயினாக நடிக்க, இன்னும் அவகாசம் இருக்கு. மற்ற நடிகையருடன் நடிக்கும்போது, நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள, இந்த வாய்ப்பு, எனக்கு பெரிதும் உதவுகிறது.

உங்களுக்கு பிடித்த நடிகை?

நயன்தாரா நடித்த சில கதாபாத்திரங்கள், எனக்கு ரொம்ப பிடிக்கும். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில், சிம்ரன் நடிப்பை அப்படி ரசித்திருக்கிறேன். ஐஸ்வர்யா ராய் நடித்த சில படங்களும் பிடிக்கும். நடிகையரைவிட, அவங்க நடித்த கேரக்டர்களை விரும்பி பார்த்திருக்கிறேன்.

தெலுங்கு தெரியாமல் எப்படி சமாளித்தீர்கள்?

அ ஆ படத்தில் நடிக்கும்போது, தெலுங்கில் ஒரு வார்த்தை கூட தெரியாது. மற்றவர்கள் பேசுவது புரியவில்லை என்றாலும், கூர்ந்து கவனிப்பேன். ஆனால், அடுத்ததாக, தெலுங்கு பிரேமம் படத்தில் நடித்தபோது, ஓரளவு தெலுங்கு புரிந்தது.

உங்கள் தலை முடியே, உங்களின் முகவரி போல ஆயிடுச்சோ?

ஆமாம்; அது உண்மை தான். என் தலைமுடி செயற்கை அல்ல; இயற்கை தான். பிரேமம் படத்தில், சுருட்டை தலையா, நிறைய தலை முடியோட எப்படி பார்த்திங்களோ, இப்பவும் அப்படித்தான் இருக்கேன். பிரேமம் படத்தில் என் கதாபாத்திரம் பற்றி யாராவது சொல்லணும்னா, சுருட்டை தலை முடியோட, ஒரு பொண்ணு நடிச்சதே அப்படின்னுதான் அடையாளம் சொல்லுவாங்க. ஆனால், கொடி படத்தில், அள்ளி கட்டி தலை சீவிய, ஒரு பெண்ணாக தெரிவேன்.

சினிமாவுக்கு வந்தபின், உங்களுக்கு யாராவது காதல் துாது விட்டுள்ளனரா?

நிறைய பேர், தங்கள் காதலை என்னிடம் சொல்லியிருக்கின்றனர். எஸ்.எம்.எஸ்., மூலம் கூட சொல்லிருக்காங்க. என் புகைப்படத்தை வரைந்து, எனக்கு அனுப்பி, காதலைச் சொல்றாங்க; நான் சிரிச்சிட்டே போய்டுவேன்; எத்தனை பேரைத்தான் காதலிக்கிறது.

மலையாள நடிகையர் பாடுறாங்களே; உங்களுக்கு அந்த ஆசை இருக்கா?

ஆமாம்; எனக்கு பாடத் தெரியும். முறைப்படி சங்கீதம் கத்திருக்கிறேன். நல்லா பாடுவேன். வாய்ப்பு கிடைத்தால், தமிழ் சினிமாவில் பாடுவேன்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget