ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டு செல்லும் ஆவணங்கள்!


ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 19 ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்த்தல் 6–ந்தேதி தொடங்குகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு இந்தியா முழுவதும் புதிதாக ஆசிரியர் பணியில் சேர்வதற்கு அவர்கள் பி.எட்.படித்திருந்தாலும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தாலும் அந்தந்த மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 12–ந்தேதி ஆசிரியர் தகுதி தேர்வு, முதல் முதலாக நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆர்வத்துடன் தேர்வு எழுதினார்கள். ஆனால் அவர்களில் 2ஆயிரத்து 500 பேர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது தேர்வு எழுதியவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.எதனால் இந்த அளவுக்கு தேர்ச்சி விகிதம் குறைந்தது என்று விசாரித்ததில் அவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளும் மிகக்கடினமாக இருந்தன. தேர்வு எழுதவும் 1½ மணிநேரம் போதவில்லை என்று தெரிந்தது.

தேர்வு முடிவு வெளியீடு
இதைத்தொடர்ந்து மீண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு, கடந்த அக்டோபர் 14–ந்தேதி நடத்தப்பட்டது. ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள் இந்த தேர்வை எழுதினால் அவர்கள் தேர்வு கட்டணம் கட்டவேண்டியதில்லை என்று கூறி தேர்வு நடத்தப்பட்டது.அந்த தேர்வில் இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தாள்–1 என்றும் பி.எட். படித்தவர்களுக்கு 2–வதுதாள் என்றும் குறிப்பிடப்பட்டது.தாள்–1 தேர்வை 2 லட்சத்து 78ஆயிரத்து 725 பேர்களும், 2–வது தாள் தேர்வை 3 லட்சத்து 77 ஆயிரத்து 973 பேர்களும் எழுதினார்கள். அதாவது மொத்தம் 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினார்கள். அந்ததேர்வுகளின் முடிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

19 ஆயிரம் பேர் தேர்ச்சி
முதல் தாளில் 10 ஆயிரத்து 397 பேர்களும், 2–வது தாளில் 8ஆயிரத்து 849 பேர்களும் 60 சதவீத மார்க்கும் அதற்கு மேலும் எடுத்து தேர்ச்சிபெற்றுள்ளனர். மொத்தத்தில் 19ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலிப்பணியிடங்கள் 18 ஆயிரம் உள்ளது. அதனால் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 8849 பேர் மட்டுமே உள்ளதால் இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும். அதே நேரத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 7 ஆயிரத்து 500 மட்டுமே உள்ளதால் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைக்கும்.வேலைக்காக சான்றிதழ் சரிபார்ப்பு 6–ந்தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க உள்ளது. அவர்களுக்கு அழைப்புக்கடிதம் எதுவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து அனுப்பப்பட வில்லை. அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ள அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்துகொள்ளவேண்டும்.

சான்றொப்பம் இட்ட சான்றிதழ் ஜெராக்ஸ்
சான்றிதழ் சரிபார்க்க வரும்போது அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களும், அந்த சான்றிதழ்களின் 2 ஜெராக்ஸ் காப்பிகளும் சான்றொப்பம் இட்டபடி(அட்டஸ்டடு காப்பி) கொண்டுவரவேண்டும்.இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் (முதல்தாள் எழுதி தேர்ச்சிபெற்றவர்கள்) மேற்கண்ட சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அட்டையையும் கொண்டுவரவேண்டும். மேலும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அட்டையின் ஜெராக்ஸ் எடுத்து மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று 2 காப்பி கொண்டுவரவேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகளுக்கும் வேலைவாய்ப்பு இயக்குனகம் உரிய அறிவுரை வழங்கி உள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரியிடம் கேட்டதற்கு தேர்வு முடிவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று நள்ளிரவு அல்லது இன்று (சனிக்கிழமை) காலை கண்டிப்பாக தெரிந்துகொள்ளலாம் என்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆசிரியர் தகுதிதேர்வுக்கு உரிய தற்காலிக கீ ஆன்சர் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் ஆன்சர் குறித்த கருத்துக்கள் வரவேற்கப்பட்டன. அதற்கு கால அவகாசம் ஓரு வாரம் கொடுக்கப்பட்டது.பின்னர் அனைத்து கருத்துக்களும் பெறப்பட்டு, பின்னர் பாட ரீதியாக நிபுணர்களை அழைத்து அவர்கள் தந்த ஆன்சர் கொண்டு விடைத்தாள்(ஓ.எம்.ஆர்.ஷீட்) மதிப்பீடு செய்யப்பட்டு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

தவறுகள்
ஏராளமானவர்கள் ஒ.எம்.ஆர்.ஷீட்டில் (விடைத்தாளில்) விடையை கட்டத்திற்குள் சரியாக அடிக்கவில்லை. பல தவறுகளை செய்திருந்தனர். வினாத்தாளில் உள்ள சீரியல் எண்ணை விடைத்தாளில் குறிப்பிடவில்லை. அப்படிப்பட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் தள்ளுபடி செய்துவிட்டோம். பலர் பழைய தேர்வு எண்ணை குறிப்பிட்டு இருந்தனர். இருப்பினும் அவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget